தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் அஜித் குமார். ரசிகர்கள் அன்போடு ‘தல’ என்று அழைக்கப்படும் அஜித், 1993-ஆம் ஆண்டு வெளி வந்த ‘அமராவதி’ என்ற படத்தில் தான் முதன் முறையாக கதையின் நாயகனாக நடித்தார். அந்த படத்தினை இயக்குநர் செல்வா இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து ‘பவித்ரா, ஆசை, வான்மதி, கல்லூரி வாசல், காதல் கோட்டை, உல்லாசம், காதல் மன்னன், வாலி, அமர்க்களம், சிட்டிசன்’ போன்ற பல படங்களில் நடித்தார் ‘தல’ அஜித்.
‘தல’ அஜித்துக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக அஜித் நடிப்பில் வெளி வந்த திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.
‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் ‘தல’ அஜித்துடன் இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணி அமைத்திருக்கும் படம் தான் ‘வலிமை’. இந்த படத்தில் அஜித்துக்கு செம மாஸான போலீஸ் ரோல் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, அஜித் சில படங்களில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், இந்த படம் அவருக்கு ரொம்பவும் ஒரு ஸ்பெஷலான படமாக இருக்குமாம்.
‘தல’ அஜித்தின் திரை உலக வாழ்வில் ‘வலிமை’ திரைப்படம் அவருக்கு 60-வது படமாம். பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய ‘மங்காத்தா’ அஜித்தின் 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ‘வலிமை’ படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தான் தயாரித்து கொண்டிருக்கிறார். ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இது அதிக பொருட்செலவில் தயாராகி கொண்டிருக்கிறது.
உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று (மே 1-ஆம் தேதி) அஜித்தின் பிறந்த நாள் என்பதால், ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளி வரும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். தற்போது, இது தொடர்பாக படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் பேசுகையில் “இந்த ‘கொரோனா’ வைரஸால் உலகமே ஸ்தம்பித்து போய் இருக்கிறது. இப்படி ஒரு சூழ்நிலையில் நமது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்ய வேண்டாம் என அஜித் என்னிடம் கூறினார்” என்று தெரிவித்திருக்கிறார்.
நேற்று இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டிருந்த அறிக்கையிலும் “கொரோனா என்கிற கொடிய நோயின் தாக்கத்தில், அகில உலகமே போராடிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் எந்த படத்துக்கும் எந்த விதமான விளம்பரமும் செய்ய வேண்டாம் என்று எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரை கலந்து ஆலோசித்து, ஒருமித்தக் கருத்தோடு முடிவெடுத்து உள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம். அதுவரை தனித்து இருப்போம், நம் நலம் காப்போம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.