தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. கூடிய விரைவில் இந்த படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் விஜய்க்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தை பற்றி சொல்லவே தேவையில்லை.
அந்தளவிற்கு கோடிக்கணக்கான பேர் விஜய்க்கு ரசிகர்களாக உள்ளார்கள். அதிலும் மக்கள் மட்டுமல்லாமல் பிரபலங்கள் பலரும் விஜய்க்கு ரசிகர்களாக உள்ளார்கள். இது ஒரு பக்கம் இருக்க, விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அதிலும் தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.
உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம்:
மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு கட்சி சார்பில் வேட்பாளர்கள் களத்தில் இறங்கி இருந்தனர். இதில் விஜய் மக்கள் இயக்கம் சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டார்கள். இது குறித்து கூட விஜய்க்கும் அவருடைய தந்தைக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பேச்சு வார்த்தை இல்லாமல் பிரிவில் இருந்தார்கள். மேலும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மொத்தம் 169 பேர் போட்டியிட்டார்கள்.
உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி:
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 129 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். இப்படி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது. இவர்கள் முதலமைச்சர் பதவிக்கு போட்டி போட்டால் அவ்வளவு தான் தலையில் துண்டை போட்டுக் கொண்டு போக வேண்டும் என்று கூறும் வகையில் அரசியல் வட்டாரத்தில் நிலைமை இருந்தது. அதோடு இது குறித்து பல்வேறு சர்ச்சைகளும் கருத்துக்களும் எழுந்தது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்:
இப்படி இந்நிலையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. வழக்கம்போல் இதில் அதிமுக, திமுக, பாஜக என பல கட்சிகள் போட்டியிட இருக்கிறது. இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்க கட்சியும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ளனர். இது குறித்து விஜய் மக்கள் இயக்க பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம்:
அதுமட்டுமில்லாமல் தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய புகைப்படம் மற்றும் மக்கள் இயக்கத்தின் கொடியை தேர்தலில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்திருக்கிறார். இதனால் விஜய் மக்கள் இயக்கம் பயங்கர குஷியில் உள்ளார்கள் என்று தெரிவித்திருந்தார். இப்படி புஸ்ஸி ஆனந்த் கூறிய தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு விஜய் அரசியலில் வருவதற்கு இது ஆரம்ப புள்ளியாக இருக்குமோ? அதனால் தான் அவர் அரசியலில் தன் புகைப்படத்தையும் கொடியையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சொன்னாரோ?என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.