தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன் முகங்களை கொண்டவர். 1981 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படத்தில் தான் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் இயக்குனராக சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து மேலும், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப் படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்கிய படங்கள் எல்லாமே மக்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது. கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக சினிமா திரை உலகில் எஸ்.ஏ. சந்திரசேகர் பணியாற்றி வருகிறார்.
தற்போது சினிமா உலகில் முடிசூடா மன்னனாக கலக்கிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யை உருவாக்கியதும் எஸ் ஏ சந்திரசேகர் தான். இவர் விஜய் மட்டுமில்லாமல் பல கலைஞர்களையும் உருவாக்கியுள்ளார். தளபதி விஜய் அவர்கள் இந்த அளவிற்கு புகழின் உச்சத்தில் இருப்பதற்கு காரணம் அவரது தந்தை ஏ சந்திரசேகர் தான். கடைசியாக இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் இயக்கிய 70 வது திரைப்படம் “கேப்மாரி”. இந்த படத்தில் ஜெய், அதுல்யா ரவி, வைபவி சாண்டில்யா, விபின் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.
எஸ்.ஏ சந்திரசேகரின் திரைப்பயணம்:
இந்த படம் இன்றைய இளைஞர்கள் செய்யும் அட்டூழியங்களையும், போடும் ஆட்டங்களையும் வெட்ட வெளிச்சமாக சுட்டிக்காட்டி, அதனால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவான கதை. ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியை கிடைக்கவில்லை. அதற்கு பிறகு இவர் எந்த படத்தையும் இயக்க வில்லை. இந்நிலையில் தன் வாழ்க்கை பயணம் குறித்த முதல் வீடியோவை பிளாட்பார்மில் எஸ்.ஏ.சி என்ற தலைப்பில் எஸ்.ஏ.சந்திரசேகர் ரிலீஸ் செய்துள்ளார் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் ‘யார் இந்த எஸ்.ஏ.சி’ என்ற யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார்.
யூடியூப் சேனலை தொடங்கியுள்ள எஸ்.ஏ சந்திரசேகர்:
அதில் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றையும் சினிமா பயணத்தையும் பற்றி பதிவு செய்ய இருப்பதாக ஏற்கனவே அந்த சேனலின் promo ஒன்றை ரிலீஸ் செய்து இருந்தார். அது சோசியல் மீடியாவில் படு வைரலானது. இந்த நிலையில் தன் வாழ்க்கை வரலாற்றின் முதல் எபிசோடை எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் ‘பிளாட்பார்மில் எஸ்ஏசி’ என்ற தலைப்பில் தற்போது ரிலீஸ் செய்துள்ளார். சிவப்பு கலர் காரில் தி நகரில் இருக்கும் நாயுடு ஹால் முன்பு வந்திருக்கும் எஸ் ஏ சந்திரசேகர் தன் கையில் ஒரு பாய் மற்றும் தலையணையோடு எடுத்துக்கொண்டு பிளாட்பார்மில் அமர்கிறார். அதன் பிறகு தன் வாழ்க்கை பயணம் குறித்து பேசுகிறார்.
எஸ்.ஏ சந்திரசேகரின் வாழ்கை தொடங்கிய கதை:
தான் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து தான் சென்னை வாழ்க்கையை தொடங்கியதாக தெரிவித்துள்ளார். நாயுடு ஹால் முன்பு சுமார் 47 நாட்கள் இருந்ததாகவும், வீதிகளிலேயே படுத்து உறங்கியதாகவும் கூறியிருக்கிறார். பின் மழை வரும்போதெல்லாம் அருகில் நின்று கொண்டிருக்கும் சைக்கிள் ரிக்ஷாக்களுக்குள்சென்று அமர்ந்து கொண்டிருந்ததாக தன்னுடைய பழைய நினைவுகளை எஸ் ஏ சந்திரசேகர் கூறியுள்ளார். மேலும், வருடத்துக்கு 2 அல்லது 3 முறையாவது தான் படுத்து உறங்கிய அந்த இடத்திற்கு வந்து உறங்கி செல்வதை இன்றும் வாடிக்கையாகவே வைத்திருக்கிறாராம்.
பிளாட்பார்மில் எஸ்ஏசி டைட்டில்:
இரவு 11 மணிக்கு மேல் அங்கு வந்து அதிகாலை 4 மணிக்கு எழுந்து வீட்டிற்குச் சென்று விடுவாராம். பிளாட்ஃபார்ம் வாழ்க்கையை இன்னும் மறக்கவில்லை என்று முதல் வீடியோவில் எஸ் ஏ சந்திரசேகர் கூறியுள்ளார். இப்படி இவர் தன்னுடைய வாழ்க்கை சுயசரிதையை சோசியல் மீடியாவில் பதிவு செய்திருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் முதல் எபிசோடிலேயே பலருடைய ஆர்வத்தையும் தூண்டி உள்ளார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து எபிசோடுகளில் பல சுவாரஸ்ய தகவல்களை வெளியிடுவதாகவும் எஸ் ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோவை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.