வணங்கான் பட விழாவில் விக்ரம் கலந்து கொள்ளாததற்கான காரணம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனரான பாலு மகேந்திராவின் படைப்பில் இருந்து உருவாக்கப்பட்டவர். அதுமட்டுமில்லாமல் பாலா சினிமா உலகில் இயக்குனர் ஆன முதல் படத்திலேயே தேசிய விருது பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலா இயக்குனர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். தற்போது இவர் வணங்கான் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக அருண் விஜய் நடித்து இருக்கிறார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி, இயக்குனர் பாலாவும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்திற்கான பணிகள் எல்லாம் முடிந்து பொங்கலுக்கு ரிலீஸ் ஆக தயாராக இருக்கிறது.
பாலா 25 மற்றும் வணங்கான் நிகழ்ச்சி:
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீடு விழாவும், பாலாவினுடைய திரைப்பயணம் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி 'பாலா 25' விழாவும் இணைந்து சென்னையில் சமீபத்தில் நடைபெற்று இருந்தது. இதில் வணங்கான் படக்குழுவுடன் சிவக்குமார், சூர்யா, விக்ரமன், மிஷ்கின், சமுத்திரக்கனி, சிவகார்த்திகேயன், மாரி செல்வராஜ் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். மேலும், இந்த விழாவில் இயக்குனர் பாலாவை புகழ்ந்து பல பிரபலங்கள் பேசி இருந்தார்கள்.

பாலா-விக்ரம் கூட்டணி:
இப்படி இருக்கும் நிலையில் இந்த விழாவிற்கு நடிகர் விக்ரம் வராதது குறித்த செய்தி தான் தற்போது இணையத்தில் பூதாகரமாக வெடித்து கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் முதன் முதலாக இயக்குனர் பாலா அவர்கள் விக்ரமை வைத்து இயக்கிய படம் சேது. இந்த படத்தின் மூலம் தான் விக்ரம் உடைய திரை வாழ்க்கையை மாறியது. இதற்கு முன்பு விக்ரம் 20 படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு என்று ஒரு அடையாளத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்திக் கொடுத்தது சேது தான்.

பாலா-விக்ரம் பிரச்சனை:
அது மட்டும் இல்லாமல் சீயான் என்ற அடைமொழியும் இந்த படத்தின் மூலம் தான் விக்ரமுக்கு கிடைத்தது.
இந்த படத்தை அடுத்து இயக்குனர் பாலா, விக்ரமை வைத்து பிதாமகன் என்ற படத்தையும் இயக்கியிருந்தார். இந்த படமுமே இவருடைய கேரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அது மட்டும் இல்லாமல் இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்த படத்தின் மூலம் விக்ரமுக்கு தேசிய விருது கிடைத்தது. இதற்குப் பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றவே இல்லை. இருந்தாலும் இயக்குனர் பாலா மீது இருந்த மரியாதை, பாசத்தினால் விக்ரம் அவர்கள் தன்னுடைய மகன் துருவை வைத்து படம் எடுக்க சொன்னார்.

பிரிவுக்கு காரணம் இது தான்:
தெலுங்கில் வெளியாகி ஹிட் கொடுத்த அர்ஜுன் ரெட்டி படத்தின் உடைய ரீமேக்கை பாலா எடுத்தார். ஷூட்டிங் முடித்துவிட்டு படத்தை காண்பித்தபோது தயாரிப்பாளர்களுக்கு படம் பிடிக்கவில்லை. விக்ரமுக்கும் படம் சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் அவர் அங்கிருந்து எழுந்து சென்று விட்டார். இதை பாலா போன் செய்து கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் வந்தது. அதிலிருந்து தான் இவர்கள் இருவரும் பேசுவதில்லை என்று ஒரு பேட்டியில் செய்யாறு பாலு கூறியிருந்தார். மேலும், விக்ரமுக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கி தந்ததே இயக்குனர் பாலா தான். அவருடைய விழாவில் விக்ரம் கலந்து கொள்ளாதது பலருக்குமே வருத்தம் தான். இதை தான் நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்து வருகிறார்கள்.






