ரஜினியின் ‘பாபா’ படத்துக்கு பா.ம.க-வினர் கடுமையான எதிர்ப்பு காட்டினர். ‘பாபா’ படத்தின் படப்பெட்டியை பா.ம.க-வினர் தூக்கிக்கொண்டு போனபோது, களத்தில் நேரடியாக இறங்கினார் விஜயகாந்த்.
‘கோழைகளைப் போல படப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு போகிறார்கள். தைரியமிருந்தால் பகலில் படப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு போ’ என ஆவேசப்பட்டார். அடுத்து வந்த நாள்களில், கள்ளக்குறிச்சியில் பா.ம.க-வுக்கு எதிராகக் கூட்டம் போட்டு, அரசியலுக்குள் நுழைந்தார் விஜயகாந்த். இதே பாணியிலான அரசியலைத்தான் விஷால் செய்கிறார். தற்போது ஹெச்.ராஜாவை எதிர்ப்பதன் மூலம் நேரடி அரசியலுக்கு முன்னோட்டம் பார்க்கிறார்.
மெர்சல் படத்தில் வெளிப்படுகிற வசனத்தின் மூலமாக மத்திய அரசுக்கு எதிர்ப்பு காட்டுவதைவிட, நேரடியாகக் களத்தில் இறங்கும்போது, விஜயகாந்த்போல உள்ளே நுழைந்துவிடலாம் எனக் கணக்குப் போடுகிறார்.
அரசியலுக்குள் வரும் எண்ணம் இருப்பதால்தான், மத்தியில் ஆளும் ஒரு கட்சியின் தேசிய நிர்வாகியைக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார் விஷால்.
சரத்குமாரைத் தோற்கடித்து நடிகர் சங்கத்தைக் கைப்பற்றியதும் தயாரிப்பாளர் சங்கத்தைக் கைப்பற்றியதும் அரசியலுக்கான ஒரு முன்னோட்டம்தான். எதுவாக இருந்தாலும் களத்தில் நேரடியாக எதிர்கொள்ளும் மனநிலையில் விஷால் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது