தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநராகவும்,நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் சுந்தர்.சி. 1995-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘முறை மாமன்’. இந்த படத்தினை சுந்தர்.சி இயக்கியிருந்தார். இது தான் சுந்தர்.சி இயக்கிய முதல் தமிழ் திரைப்படமாம். இதில் ஹீரோவாக ஜெயராம் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக குஷ்பூ டூயட் பாடி ஆடியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.
இதனைத் தொடர்ந்து ‘முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், ஜானகி ராமன், நாம் இருவர் நமக்கு இருவர், உன்னைத் தேடி, உனக்காக எல்லாம் உனக்காக, உள்ளம் கொள்ளை போகுதே, ரிஷி, அன்பே சிவம், வின்னர், கிரி, லண்டன், சின்னா, இரண்டு, கலகலப்பு 1 & 2, தீயா வேலை செய்யணும் குமாரு, ஆம்பள, வந்தா ராஜாவா தான் வருவேன், ஆக்ஷன்’ என அடுத்தடுத்து பல தமிழ் படங்களை இயக்கினார் சுந்தர்.சி.
இதில் ‘வின்னர்’ என்ற படத்தில் கதாநாயகனாக பிரபல நடிகர் ‘டாப் ஸ்டார்’ பிரஷாந்த் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக கிரண் டூயட் பாடி ஆடியிருந்தார். மேலும், முக்கிய வேடங்களில் எம்.என். நம்பியார், விஜய குமார், எம்.என். ராஜம், ரியாஸ் கான், ராஜ் கபூர், அனுராதா, சந்தான பாரதி, சிங்கமுத்து மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ‘வைகைப் புயல்’ வடிவேலு காமெடியில் கலக்கியிருந்தார்.
‘கைப்புள்ள’ என்ற கதாபாத்திரத்தில் தான் வடிவேலு வலம் வந்திருந்தார். இந்த படத்தில் கதையின் நாயகனே வடிவேலு என்று சொல்லும் அளவிற்கு, படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் பெரிதும் பேசப்பட்டது. இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இதனை ‘மதர் இந்தியா மூவீஸ் இண்டர்நேஷனல்’ என்ற நிறுவனம் சார்பில் ராமச்சந்திரன் தயாரித்திருந்தார்.
இந்த படம் தயாரிப்பாளர் ராமச்சந்திரனுக்கு பெரிய லாபத்தை கொடுக்கவில்லையாம். இதனால் அவர் தென்காசியில் உள்ள ஒரு ஹோட்டலில் சர்வராக பணிபுரியும் நிலைமைக்கு தள்ளப்பட்டாராம். அந்த சூழ்நிலையில் ஒரு பத்திரிக்கையாளர் அவரை சந்தித்து பேசியிருக்கிறார். பின், அந்த பத்திரிக்கையாளரிடம் ராமச்சந்திரன் தனது நிலைமையை விவரித்து குமுதம் நாளிதழுக்காக ஒரு இன்டர்வியூ கொடுத்திருக்கிறார்.
அந்த இன்டர்வியூவை படித்த பிரபல இயக்குநர் பாலா, ராமச்சந்திரனை அழைத்து அவரது படத்தில் நடிக்கும் வாய்ப்பினை வழங்கினார். அதன் பிறகு பல தமிழ் படங்களில் நடித்த ராமச்சந்திரன், இப்போது கடன் தொல்லையிலிருந்து மீண்டு வந்து விட்டாராம். ராமச்சந்திரன் ‘வின்னர்’ படம் பற்றி பேசுகையில் “இந்த படத்துல இடம்பெற்ற காமெடி காட்சிகளுக்கு மட்டும் ராயல்டி மூலம் எனக்கு பணம் வந்திருந்தது என்றால், நான் தான் பெரிய கோடீஸ்வரனாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அதெல்லாம் இல்லாமல் போய் விட்டது” என்று தெரிவித்திருக்கிறார்.