யூ-ட்யூபர் இர்ஃபானின் சொகுசு கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு – காரை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை. என்ன ஆனது ?

0
2423
Irfan
- Advertisement -

பிரபல யூடுயூபர் இர்ஃபானின் கார் மோதியதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். யூடியூப் பிரபலம் மற்றும் உணவு விமர்சகரான இர்பானை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உணவு விமர்சகர் இர்பான் அவர்கள் பல்வேறு ஹோட்டல்களுக்கு சென்று உணவுகளை சாப்பிட்டு அதனுடைய டேஸ்ட் குறித்தும், உணவின் தரத்தை குறித்தும் வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவு இடுவார். இதனாலே இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார் என்று கூட சொல்லலாம். இவர் பல ஊர்களுக்கு சென்று பல ஓட்டல்களில் சாப்பிட்டு அதற்கான கருத்துக்களை போடுவார்.

-விளம்பரம்-

மேலும், இவர் எப்போதும் அரை டவுசர் போட்டுக்கொண்டு தான் சந்து கடை முதல் வெளிநாடுகள் உள்ள காட்ஸ்லி ஹோட்டல் வரை சென்று உணவை சாப்பிட்டு விமர்சனம் செய்து வீடியோ போடுவார். இதன் மூலம் இவருக்கு பல விருதுகள் கிடைத்திருக்கிறது.இவருக்கு அனைத்து வயதிலும், அனைத்து தரப்பிலும் ரசிகர்கள் உள்ளனர். இவர் யூடியூபில் வைத்திருக்கும் சேனலுக்கு, 36 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோயர்ஸ் தற்போது உள்னர்.

- Advertisement -

சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவரது திருமணத்திற்கு ஆளுநர் ரவி உட்பட பல்வேறு பிரபலங்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்தார். மேலும், இவரது திருமணத்தில் பல யூடுயூபர்கள் கலந்துகொண்டனர். அதே போல பல சினிமா பிரபலங்கள் கூட கலந்துகொண்டனர். மேலும், இவர் மிகப்பெரிய கார் பிரியர் என்பதும் அடிக்கடி இவர் சொகுசு கார்களை வாங்கி விற்று மீண்டும் கார் வாங்குவதையும் வழக்கமாக கொண்டவர்.

இந்த நிலையில் இர்பானின் கார் மோதியதில் மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் திருமணம் முடித்த இர்பான் தனது குடும்பத்துடன் அடிக்கடி காரில் பயணித்து வருகிறார். அந்த வகையில் நேற்று தனது சொகுசு  காரில் தென் மாவட்டத்திலிருந்து சென்னையை நோக்கி பயணித்து இருக்கிறார் இர்பான். அப்போது சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை அடுத்த மறைமலைநகர் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மூதாட்டி மீது கார் மோதியுள்ளது.

-விளம்பரம்-

இதில் அந்த மூதாட்டி தூக்கி வீசப்பட்டுள்ளார்.  கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார். விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இர்ஃபான் வந்த பென்ஸ் காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் உயிரிழந்த மூதாட்டி காட்டாங்குளத்தூர் முல்லை நகர் பகுதியில் சேர்ந்த பழனி என்பவரின் மனைவி பத்மா என்று தெரிய வந்திருக்கிறது. இவர் மறைமலைநகர் அடுத்துள்ள புத்தேரியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பணியாற்றி வருவதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மேலும், விசாரணையில் காரை இர்ஃபான் ஓட்டி வரவில்லை என்றும் அவரது ஓட்டுனரான அசாருதீன் என்பவர் தான் ஓட்டி வந்ததாகவும் அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Advertisement