உதவி இயக்குனரை சீரியல் நடிகர் நவீன் கன்னத்தில் அறைந்து இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நவீன். இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த இதயத்தை திருடாதே சீரியலில் கதாநாயகனாக நடித்து இருந்தார். இவர் சின்னத்திரை வருவதற்கு முன்பே பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
இவர் முதன் முதலாக மலையாளத்தில் Money Ratnam என்ற படம் மூலம் தான் நடிகராக நடிக்க தொடங்கினார். அதன் பின் தமிழில் மசாலா படம், பூலோகம், பட்டாஸ், மிஸ்டர் லோக்கல் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் தான் இவர் சின்னத்திரையில் அறிமுகமானார். மேலும், இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்து இருந்தது இதயத்தை திருடாதே சீரியல் தான். இந்த சீரியலின் மூலம் இவருக்கென ஒரு தனி ரசிகர் படை உருவாகி இருக்கிறது.
இதயத்தை திருடாதே சீரியல் :
இந்த சீரியலில் சிவா என்ற கதாபாத்திரத்தில் நவீனும், சகானா என்ற கதாபாத்திரத்தில் ஹிமா பிந்துவும் நடித்து இருந்தார்கள். சமீபத்தில் தான் இந்த சீரியல் முடிந்தது. இதனிடையே நடிகர் நவீன், செய்தி வாசிப்பாளர் கண்மணியும் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்று தகவல் வெளியாகி இருந்தது. ஏப்ரல் மாதம் சென்னையில் உள்ள விஜயாபார்க்கில் இவர்களின் திருமண நிச்சயதார்தம் நடைபெற்று இருந்தது. அனைவரும் எதிர்பார்த்திருந்த கண்மணி- நவீன் திருமணம் ஜூன் மாதம் நடந்து முடிந்தது.
கண்மணி- நவீன் திருமணம்:
இவர்களுடைய திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள், முக்கிய சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். தற்போது நவீன் அவர்கள் கலர்ஸ் தமிழில் கண்ட நாள் முதல் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் அருண் ராஜனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் தொடங்கிய குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இந்த சீரியலின் சூட்டிங் சென்னை கிருஷ்ணா நகரில் நடந்து கொண்டிருக்கின்றது.
கண்ட நாள் முதல் சீரியல்:
இந்த நிலையில் நேற்று மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இரண்டு ஹீரோக்களில் ஒருவரான நவீன் சூட்டிங் வரவில்லை. இதனால் உதவி இயக்குனர் குலசேகரன் நவீன் உடைய அறைக்கு சென்று அழைத்திருக்கிறார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியை உதவி இயக்குனர் குலசேகரன் கண்ணத்தில் நவீன் அடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் சூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டு பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. பின் குலசேகரனுக்கு கண்ணுக்கு கீழ் இரத்தம் வந்து இருக்கிறது. இதனை அடுத்து அவருக்கு முதலுதவி தந்ததாகவும் கூறப்படுகிறது.
நவீன் மீது உதவி இயக்குனர் அளித்த புகார்:
சின்னத்திரை இயக்குனர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் குலசேகரன், நவீன் மீது புகார் அளித்திருக்கிறார். மேலும், மதுரவாயல் காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. போலீஸ் இரண்டு தரப்பு வாதங்களையும் விசாரித்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக சீரியலில் நடித்த நடிகர்களிடம் கேட்டபோது, கொஞ்ச நாளாகவே இந்த சீரியலில் நவீனுக்கு நடிக்க ஆர்வம் இல்லாதவர் போல் இருக்கிறார். அவர் அடித்ததற்கான காரணம் என்னவென்று எங்களுக்கும் தெரியவில்லை என்று கூறி இருக்கிறார்கள். இதன் மூலம் நவீன் சீரியலில் மீண்டும் நடிப்பாரா? இல்லை சீரியலை விட்டு விலகுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.