இரண்டு நாட்களாக சமூக வலைதளங்கள் முழுவதும் அபிராமி பற்றிய செய்திகள் தான். பெண் ஒருவர் தன் இரண்டு குழந்தைகளை விஷம் வைத்து கொன்ற செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
அபிராமி கொலை செய்தது தொடர்பாக குன்றத்தூர் காவல்நிலையத்தில் நேற்றிரவு அபிராமியின் கணவர் விஜய் உடன் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. காவல்நிலையத்தில் உள்ள ஒரு மரபெஞ்சில் துவண்டுப்போய் தனியாக விஜய் உட்கார்ந்திருந்தார். நெஞ்சை அழுத்தும் துயரத்திலிருந்து மீள்வதற்கு வழியின்றி பொதுவெளியில் அழுகையை அடக்கிக் கொண்டிருந்தவரின் தவிப்பு காண்பதற்கே கடினமாக இருந்தது.
வாய்விட்டு பேசுவதின் மூலம் கொஞ்சமேனும் ஆசுவாசமடைவார் எனத் தோன்றவே அவரிடம் பேசினேன். “எனக்கு அப்பா, அம்மா ரெண்டுபேருமே இல்லை. என் பொண்ணையும், பையனையும்தான் என் அப்பா அம்மாவா நினச்சேன்.
அவளுக்கு என்கூட வாழ பிடிக்கலைன்னா போயிட்டே இருந்திருக்கலாமே. அவ தப்பு பண்றான்னு தெரிஞ்சும் இனி ஒழுங்கா நடந்துப்பான்னு நம்பின பாவத்துக்கு எனக்கு மட்டுமாவது விஷத்தைக் கொடுத்து கொன்னு இருக்கலாமே. என் பிள்ளைங்க என்ன பண்ணுச்சு. கட்டில் மேல கிடந்த என் பிள்ளைங்களுக்கு நான் முத்தம் கொடுக்கும்போது அவங்களுக்கு உயிர் இல்லங்க” என்ற விஜய் அதற்கு மேல் பேச முடியாமல் உடைந்து போனார். அந்த சமயத்தில், அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை.