அஜித் சாரைத் தவிர ‘காதல் மன்னன்’ படத்துல வேலை பார்த்த மற்ற ஆர்ட்டிஸ்ட் எல்லோருக்குமே சினிமா புதுசு. சரண் சார் மட்டும் இல்லைனா இந்தப் படத்துல நடிச்சிருக்கவே மாட்டேன். பெண்கள் மீது அவர் அளவுகடந்த மரியாதை வெச்சிருக்கார். டாக்டர் குடும்பத்துல பொறந்து வளர்ந்த நான், இப்போ முதலமைச்சர் குடும்பத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கேன்.” என்று விழிகள் விரியப் பேசத் தொடங்குகிறார், ‘காதல் மன்னன்’ மானு.
எனக்கு மூன்று வயது பெண் குழந்தை இருக்கா. ‘மானு ஆர்ட்ஸ்’ங்கிற லாப நோக்கமற்ற டிரஸ்ட்டை கடந்த 20 வருடமா நடத்திட்டு வர்றேன். ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் பெற்ற குழந்தைகளுக்கு உதவி செய்வதுதான் இந்த டிரஸ்டின் நோக்கம்.
எங்களோடது டாக்டர் குடும்பம். தாத்தா, அப்பா, சொந்தக்காரங்க பலரும் டாக்டர்ஸ். சின்ன வயசுல இருந்து, இப்போவரை என்னோட அப்பா என்ன சொல்றாரோ, அதைத்தான் செய்றேன். அவரோட வார்த்தைகளை மீறி எதையும் செஞ்சதில்லை. ‘காதல் மன்னன்’ ஷூட்டிங்கிற்குகூட, குடும்பத்தோடதான் போவேன்.
அஸ்ஸாம், கவுஹாத்தியில மரியாதை மிக்க குடும்பங்கள்ல எங்க குடும்பம் முக்கியமானது. எங்க குடும்பத்து ஆட்கள் நடந்து வந்தாலே, ரோட்டுல போறவங்க வர்றவங்க எல்லாரும் வணக்கம் வெச்சுட்டுப் போவாங்க. என் தாத்தா கோபிநாத் பர்டலோய்தான் அஸ்ஸாமோட முதல் முதலமைச்சர். நான் அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோயோட மருமகள். என் குடும்பமும் என் கணவர் குடும்பமும் அரசியல் பின்னணி கொண்டவங்க. என் குடும்பத்தைச் சேர்ந்தவங்க, நான் அரசியல்ல ஈடுபடணும்னு நினைக்கிறாங்க.