நடிகை ரோஜா ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழில், 1992ஆம் ஆண்டு வெளிவந்த செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். அதன்பின்னர் தமிழ் தெலுங்கு , மலையாளம் என பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர், கடந்த 2002ஆம் ஆண்டு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆர்.கே செல்வமணியை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர்.மகள் அன்ஷு மாலிகாவிற்கு தற்போது 15 வயதாகிறது. இவர் பாடல் மற்றும் நடனம் கற்றும் வருகிறார். பள்ளி படிப்பை முடித்தவுடன் சீக்கிரத்தில் இவரும் தன் அம்மாவை போலவே நடிக்க வருவார்.
படங்களில் வாய்ப்பு குறைந்த்தால் ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும், நடுவராகவும் பங்குபெற்று வந்தார். அதுபோக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இணைந்து தற்போது ஆந்திர சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை கொண்டாடினார் ரோஜா. இதையொட்டி நகரி தொகுதியில் உணவகம் ஒன்றை தொடங்கியுள்ளார். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்த உணவகத்திற்கு ஒய்.எஸ் அண்ணா உணவகம் என்று பெயர் வைத்திருப்பதோடு, அந்த உணவகத்தில் ஒரு சாப்பாடு ரூ.4 -க்கு வழங்கப்படுகிறது. ரோஜாவின் இந்த செயலை பலரும் பாராட்டி வரும் வண்ணம் இருக்கின்றனர்.