பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அருண்குமார் தன் அடுத்த படத்திலும் விஜய் சேதுபதியை இயக்குகிறார். அஞ்சலி ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தை இசையமைக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா. பெயரிடப்படாத இந்தப் படம் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார் இயக்குநர் அருண்குமார்.
பண்ணையாரும் பத்மினியும்’ குறும்படம்தான் பிறகு சினிமாவானதுனு பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் ”சேதுபதி’ படத்தின் கதையை விஜய் சேதுபதியை மனத்தில் வைத்தே எழுதினேன். ஆனால் அந்த ஸ்கிரிப்டை அவரிடம் சொல்லவே இல்லை. படத்தின் மையக்கருவை மட்டும்தான் சொன்னேன். அதை கேட்ட உடனேயே, ‘கண்டிப்பா பண்றேன் அருண்’ என்று நடிக்க ஓ.கே சொன்னார். ஆனால் இந்த மூணாவது படத்துக்கான ஒன்லைனைக்கூட அவருக்குச் சொல்லவில்லை. ‘நீங்க பண்ணுங்க அருண். பண்ணுவோம்’ எனச் சொல்லிவிட்டார். அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்றுதான் ஓடிக்கொண்டிருக்கிறேன்.
ஆனால், இந்தப் பட கதையை ரெடி பண்ணிய உடனேயே மூன்று பெரிய ஹீரோக்களிடம் சொன்னேன். ஆனால், அவர்கள் யாருமே அதில் நடிக்க முன்வரவில்லை. அதில் விக்ரம் சாரும் ஒருவர். அவர் வெவ்வேறு கமிட்மென்ட்களில் பரபரப்பாக இருந்ததால் அவரால் நடிக்கமுடியவில்லை. அந்தச் சமயத்தில்தான், ‘இதுவும் சேதுபதி சாருக்கு செமையா இருக்கும்’ என்று என் டீமிலும் சொன்னார்கள். நானும் சேதுபதியும் படம் பண்ணுகிறோமோ இல்லையோ எப்போதும் தொடர்பில்தான் இருப்போம். அதனால் அவரிடம் சொன்னேன். ‘பண்ணலாம்’ என்று சொல்லிட்டார்.
சமீபத்தில்தான் முழுக்கதையையும் விஜய்சேதுபதியிடம் சொன்னேன். இதில் வேறோரு வித்தியாசமான தோற்றத்தில் விஜய்சேதுபதியைப் பார்க்கலாம். பட்ஜெட்டாகவும் ஸ்கிரிப்டாகவும் பெரிய படமாக இருக்கும். மலேசியா, தென்காசி பகுதிகளில் ஷூட்டிங் நடக்க உள்ளது. பயணம் படத்தின் முக்கியப் புள்ளியாக இருக்கும். த்ரில்லர் சினிமா என்று சொல்லலாம்.