மறைந்த பழம்பெரும் நடிகர் வெள்ளை சுப்பையாவின் நினைவுகளை குறித்து இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பழம்பெரும் நடிகராக இருந்தவர் வெள்ளை சுப்பையா. இவர் மேட்டுப்பாளையம் அருகில் உள்ள புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தவர். இவருக்கு சிறு வயதிலிருந்தே சினிமாவின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். பின் மேடை நாடகங்களில் நடித்து அதற்கு பிறகு தான் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. இவர் சிவாஜி, எம்ஜிஆர், ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்திருக்கிறார்.
அதோடு சுப்பையா என்ற பெயரில் பல நடிகர்கள் இருந்ததால் இவருடைய பெயருக்கு முன் வெள்ளை என்ற வார்த்தை சேர்த்துக் கொண்டார். அதனால் தான் இவருக்கு வெள்ளை சுப்பையா என்று பெயர் வந்தது. மேலும், இவர் 500க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். ஆயிரம் மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து வெள்ளை சுப்பையா நடித்திருக்கிறார். மூன்று தலைமுறை நடிகர்களுடன் இவர் நடித்திருக்கிறார். 2009 ஆம் ஆண்டு வெளிவந்த கண்ணுக்குள்ளே என்ற படத்தில் தான் இவர் கடைசியாக நடித்திருந்தார்.
அதற்கு பிறகு வயது மூப்பின் காரணமாக இவர் நடிக்கவில்லை. பின் 2017 ஆம் ஆண்டு உடல் நல குறைவு காரணமாக இவர் இறந்துவிட்டார். இவருடைய மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் வைதேகி காத்திருந்தாள் படத்தின் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் அவர்கள் மறைந்த நடிகர் வெள்ளை சுப்பையாவை குறித்த சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தது, 40 வருடங்களுக்கு முன்னே சென்னை தேனாம்பட்டியில் நான் பாக்கியராஜ், சங்கிலி முருகன், வெள்ளை சுப்பையா, கருப்பு சுப்பையா எல்லோருமே ஒரு காம்பவுண்டில் தான் வசித்து இருந்தோம்.
அப்போது நாங்கள் இயக்குனர் எல்லாம் ஆகவில்லை. நான் இயக்குனரான பிறகு என் படத்தில் வெள்ளை சுப்பையா, கருப்பு சுப்பையா, குள்ளமணி, பசி நாராயணன் எல்லோருக்குமே பல வாய்ப்புகள் கிடைத்தது.
குறிப்பாக வெள்ளை சுப்பையா ஆயிரத்துக்கும் அதிகமான நாடகங்களில் நடித்திருக்கிறார். 500க்கும் அதிகமான படங்களிலும் நடித்திருக்கிறார். என்னுடைய படங்களில் பலவித கதாபாத்திரங்களில் அவர் நடித்திருக்கிறார். அவருடைய நாடக அனுபவம் பலமுறை அவருக்கு கை கொடுத்திருப்பதை நான் கண்கூட பார்த்து வியந்து இருக்கிறேன்.
நாங்களும் அவருடைய நாடகங்கள் எல்லாம் கண்டு ரசித்து இருக்கிறோம். சுப்பையாவினுடைய சொந்த ஊர் மேட்டுப்பாளையம். அங்கே அவருடைய தனது ஒரே மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டார். கடந்து ஏழு வருடங்களுக்கு முன்பு வரை அவர் சினிமாவில் தலைக்காட்டி இருந்தார். பின் சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை, வயதும் ஆகிவிட்டது என்ற உடன் அவர் சினிமாவை விட்டு விலகிவிட்டார். அது மட்டும் இல்லாமல் புது இயக்குனர் பலருக்கு அவருடைய திறமை தெரியாது என்பதால் அவரை புதிய படங்களில் நடிக்க கூப்பிடவும் இல்லை.
இதனால் அவர் தன்னுடைய சொந்த ஊரான மேட்டுப்பாளையத்துக்கு சென்று உறவினர்கள் குடும்பத்தில் உள்ள செட்டில் ஆகிவிட்டார். நடிகர் சங்க தேர்தல் வரும்போது மட்டும் அவர் சென்னைக்கு வந்து செல்வார். அப்போது என்னை வந்து பார்த்துவிட்டு நீண்ட நேரம் மனம் விட்டு பேசுவார். வயதாகி விட்டதால் நிறைய அவஸ்தை பட்டு இருந்தார். நாங்கள் இருவரும் இரண்டு நாளைக்கு ஒருமுறை போனில் தவறாமல் பேசிக்கொள்வோம். ஆனால் இனி சுப்பையாவின் குரல் கேட்காதே என்று நினைக்கும் போது எனக்கு கஷ்டமாக இருக்கிறது கண் கலங்கியவாறு கூறியிருக்கிறார்.