இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், தனது முன்னாள் சக வீரரும் யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோக்ராஜ் சிங் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக யோக்ராஜ் சிங், கபில் தேவ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த நிலையில், அதற்கு முதன்முறையாக அமைதியான பதிலை கபில் தேவ் அளித்துள்ளார். அதேநேரம், இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கருடனான தனது உறவு குறித்தும் அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

'யோக்ராஜ் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை'
ஸ்போர்ட்ஸ் டாக் பாட்காஸ்டில் பேசிய கபில் தேவ், யோக்ராஜ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இல்லை என்று தெளிவுபடுத்தினார். "யோக்ராஜ் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை. வாழ்க்கையில் சில விஷயங்கள் நடக்கும். அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். இந்தியாவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தியவர்களில் ஒருவர். இன்னும் அவரை என் நண்பராகத்தான் பார்க்கிறேன்," என்று கபில் தேவ் கூறினார்.
'கசப்புடன் வாழ்ந்தால் யாரும் விரும்ப மாட்டார்கள்'
யுவராஜ் சிங் உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனைகளை படைத்திருக்கும் நிலையில், அவரது வெற்றியை நினைத்து யோக்ராஜ் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் கபில் தேவ் அறிவுறுத்தினார். "யுவராஜ் இவ்வளவு பெரிய சாதனைகளை செய்திருக்கிறார். அதற்காக அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் எல்லாம் நமக்கு கிடைக்காது. ஆனால் அதற்காக கசப்பான மனநிலையுடன் இருக்கக் கூடாது. நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்களோ அதுதான் உங்களை அடையாளப்படுத்தும்," என்றார்.

'நல்ல நாட்களை மறந்துவிடக் கூடாது'
யோக்ராஜ் சிங்குடன் இணைந்து விளையாடிய பழைய நினைவுகளையும் கபில் தேவ் பகிர்ந்துகொண்டார். "நாங்கள் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். ஒன்றாக வளர்ந்தோம், நிறைய நல்ல தருணங்களை பகிர்ந்திருக்கிறோம். இன்று எங்கள் பாதைகள் வேறாக இருக்கலாம். அதற்காக அந்த நல்ல நாட்களை மறந்துவிடக் கூடாது. சில நேரங்களில் கசப்பு அதிகமாகிவிட்டால், வாழ்க்கையின் நல்ல நினைவுகளையே மறந்துவிடுகிறோம்," என்று உருக்கமாக தெரிவித்தார்.
'கவாஸ்கரை இன்றும் எழுந்து நின்று மரியாதை செய்வேன்'
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கும் கபில் தேவ் மரியாதையுடன் பதிலளித்தார். "இன்றும் சுனில் கவாஸ்கர் என் முன் வந்தால் நான் எழுந்து நின்று மரியாதை செய்வேன். இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் செய்த பங்களிப்புக்கு நிகராக வேறு யாரையும் ஒப்பிட முடியாது. மூத்த வீரர் சில நேரங்களில் கண்டிப்பது இயல்புதான். அதில் தவறு இல்லை. அதற்காக அவரை மதிக்காமல் இருக்க முடியாது," என்று அவர் கூறினார்.
கபில் தேவின் பதில் கவனம் ஈர்ப்பு
யோக்ராஜ் சிங் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த போதிலும், அதற்கு எதிராக எந்த கசப்பும் இல்லாமல், நண்பராகவே பார்க்கிறேன் என்று கபில் தேவ் கூறியிருப்பது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. பழைய நட்பையும், மரியாதையையும் மறக்கக்கூடாது என்ற அவரது கருத்து தற்போது சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.






