நகைச்சுவை ராணி ஆச்சி மனோரமாவுக்குப் பிறகு, தமிழ் சினிமாவில் காமெடி இளவரசியாக ஜொலித்துக்கொண்டிருப்பவர், கோவை சரளா.
தென்னிந்திய மொழிகளில் 800 படங்களுக்கும் மேல் நடித்துவிட்டவர். இன்றும் ஓர் இளம் நடிகையைப்போல உற்சாகம் குறையாமல் வலம்வருபவர். அது அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் வெளிப்படுகிறது.
சினிமா ஆர்வம் எப்போது ஏற்பட்டுச்சு?
அஞ்சு வயசுலேயே, ‘எப்படியாச்சும் என்னை சினிமாவில் சேர்த்துவிடுங்க’னு வீட்டில் அடம்பிடிப்பேன். எனக்கு நாலு அக்கா, ஓர் அண்ணன். வீட்டின் கடைக்குட்டி நான். அப்பா மிலிட்டரி ஆபீஸர். காலையில் அஞ்சரை மணிக்கு மேலே தூங்கிட்டிருந்தா, அப்பாவின் பெல்டுதான் பேசும். ‘படிக்கிறேன்’னு புத்தகத்தோடு கிச்சனுக்குப் போய் தூங்குவேன்.
ஒன்பது வயசில் ‘வெள்ளி ரதம்’ படத்தில் நடிச்சேன். பிளஸ் டூ முடிச்சதும் படிப்புக்கு டூ விட்டுட்டேன். கோயம்பத்தூரிலிருந்தே மேடை நாடகங்கள், ‘முந்தானை முடிச்சு’ உள்ளிட்ட சில படங்களில் நடிச்சுட்டிருந்தேன். வாய்ப்புகள் அவ்வளவு சுலபத்தில் வந்துடலை. வெறும் சரளாவா இருந்தால் முடியாதுன்னு, சென்னைக்கு வந்து ஒவ்வொரு சினிமா கம்பெனியா ஏறி இறங்கினேன். ‘சின்னவீடு, ‘ஆத்தோர ஆத்தா’, ‘வைதேகி காத்திருந்தாள்’ எனக் கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிச்சது. 1980 இறுதியில் எக்கச்சக்க படங்களில் நடிக்க ஆரம்பிச்சேன்.
நீங்க ரொம்ப ரிசர்வ்டு டைப்; தனிமைச் சூழலில் வாழறீங்க என்ற விமர்சனங்களுக்கு என்ன சொல்றீங்க?”
“ஆமாம்! தனிமைதான் எனக்குப் பிடிச்சிருக்கு. என்னை நான் யார்னு உணர இத்தனிமை உதவுது. நான் யார்கிட்டயும் அதிகமாகப் பேச மாட்டேன். என்னை மதிச்சு பேசுறவங்க கருத்துக்கு மதிப்பு கொடுத்துக் கேட்பேன். ‘கல்யாணம் செய்துக்கலை; வயசாகியும் ஓடியாடி நடிக்கிறாள்’னு பலவிதமாகச் சொல்றாங்க. அதையெல்லாம் பெருசா எடுத்துக்கறதில்லை. நடிப்பின்மூலம் மக்களை மகிழ்விக்கிறதுதான் என் ஒரே நோக்கம். அதுக்காக நிறைய கஷ்டங்களைச் சந்திச்சிருக்கேன்.
எப்போ எனக்குக் கண்ணு சரியாகத் தெரியாமல், காது கேட்காமல், நடக்க முடியாத நிலை வருதோ அப்போதான் வயசாயிட்டதா நினைப்பேன்.
அதுவரை நான் 18 வயசுப் பொண்ணுதான். அந்த உற்சாகத்தோடுதான் இரவு பகல் பார்க்காமல் உழைப்பேன். அதுக்காக, கோடிக்கணக்குல சொத்து சேர்த்துடலை. என் அடிப்படைத் தேவைக்கானதைதான் வெச்சிருக்கேன். ஆடம்பர வாழ்க்கையும் வாழ்ந்துட்டில்லை.