மாமன்னன் படம் குறித்து இயக்குனர் லீனா மணிமேகலை முகநூலில் பதிவிட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது. . தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் 2018ல் வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு மட்டும் இல்லாமல் பல்வேறு விருதுகளையும் பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’. இந்த படமும் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.
தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ். இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினிற்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.இவர்களை தொடர்ந்து இந்த படத்தில் வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். நேற்று உதயநிதியின் மாமன்னன் படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது.
படத்தில் எல்லோரும் தனக்கு கீழ் தான் அடிங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஆதி வர்க்கத்தினருக்கும், சமுதாயத்தில் முன்னேறி வாழ வேண்டும் என்றும் அனைவரையும் சமமாக பார்க்கும் பட்டியலின மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் மாமன்னன். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் பல பிரபலங்கள் இந்த படம் குறித்த தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இப்படி ஒரு நிலையில் இந்த படம் குறித்து லீனா மணிமேகலை தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘தமிழ்நாட்டில் சாதிவெறியர் பட்டம் பெறுவது ரொம்ப எளிது, மாரி செல்வராஜ் அல்லது பா.ரஞ்சித் படங்களை விமர்சித்தால் போதும். நீங்கள் உங்கள் வாழ்க்கையையே சாதி ஒழிப்பிற்கு ஒப்புக் கொடுத்திருந்தாலும் அதுதான் கெதி.வெற்றிமாறனின் ‘அசுரனை’ விமர்சித்தால் வராத பட்டமும் அவதூறும் ‘கர்ணன்’ போன்ற சாதி ஒழிப்பென்ற பெயரில் – அல்னிமேட்டாக phallic – hyper-masculine – violent – caste pride பேசும் படத்தை குறித்து பேசும் போதும்.
‘நட்சத்திரம் நகர்கிறது’ போன்ற பாசாங்கான அரைவேக்காட்டு பெண்ணியப் படத்தைக் குறித்து பேசும்போதும் வருகிறதென்றால் எங்கே பிரச்சனை என்பது அப்பட்டம். Anti Caste warrior பட்டம் பெறுவதும் எளிது. கலை நேர்மையை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு இவர்கள் செய்வதையெல்லாம் வானளாவ புகழ்ந்துவிட்டால் போதும். Very easy. களத்தில், கருத்தியலில் எல்லாம் எதுக்கு வேலை செய்யனும். இன்னும் பத்து மு்ப்பது வருடங்கள் கழித்து ஒரு அருந்ததியரோ, குறவரோ, புதிரைவண்ணாரோ வந்து நான் பேசுவதையெல்லாம் பேசுவார்கள், பேச வேண்டும்.
மற்றபடி வியாபார சினிமாவில், லாபம் மட்டுமே குறிக்கோளாக இருக்கும் சந்தையில் எல்லாமே சரக்கு தான். அதில் சாதி ஒழிப்பு பேசுகிறேன், புரட்சி செய்கிறேன், பொன்னுலக பூமி படைக்கிறேன் என்றெல்லாம் க்ளைம் செய்வதும், அதை தமிழ் அறிவுப் புலமும் இலக்கிய முகாம்களும் முற்போக்கு இடதுசாரி கூட்டங்களும் கொண்டாடுவதும் உண்மையில் ஒரு அவல நாடகம். வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு!” என இயக்குநர் லீனா மணிமேகலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.