தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடலாசிரியர்களில் நா.முத்துக்குமாரும் ஒருவர் ஆவார். இவர் திரைப்பட பாடலாசியர் மட்டுமில்லாமல் கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர் என பன்முகம் கொண்டவர். நா.முத்துக்குமார் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரம் கிராமத்தில் பிறந்தவர். இவர் இயற்பியல் மாணவர் ஆனார். ஆனால், இவருக்கு தமிழ் மீது உள்ள காதலால் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் முதுகலை பயின்றார்.
அது மட்டும் இல்லாமல் இவர் யாப்பிலக்கணத்தை முறையாக பயின்றவர். மேலும், நா.முத்துக்குமார் அவர்களின் கவிதைகள் படிக்காத பாமரனுக்கும் புரியும் அளவிற்கு எளிமை கொண்டவை. இவர் சினிமா உலகில் இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசையில் தான் திரைத்துறைக்கு வந்தார். பின் தன் கவிதைகளால் ரசிகர்களை கவர்ந்தார்.
இதுவரை சுமார் 1,500 திரைப்பட பாடல்களை எழுதியவர். அதுமட்டும் இல்லாமல் இவர் தூசிகள், நியூட்டனின் மூன்றாம் விதி, பட்டாம்பூச்சி விற்பவன், போன்ற பல கவிதைகளின் தொகுப்புகளையும், சில்க்சிட்டி என்ற நாவலையும் எழுதி உள்ளார். மேலும், இவர் தங்க மீன்கள், சைவம் ஆகிய படங்களில் பாடல் எழுதியதற்காக இரண்டு தேசிய விருதுகளை வாங்கி உள்ளார். கவிஞர் நா.முத்துக்குமார் அவர்கள் 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி தனது 41-வது வயதில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இவருக்கு ஜீவலட்சுமி என்ற மனைவியும், ஆதவன் என்ற மகனும், மகாலட்சுமி என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் இன்று (ஜூலை 12 ) நா.முத்துக்குமாரின் பிறந்தநாளையொட்டி அவரது மகன் அவருக்கு கவிதை ஒன்றை எழுதியுள்ளார். இதோ அந்த கவிதை,
என் தந்தை பிறந்த இடம் காஞ்சிபுரம்.
அவர் என் தந்தையாக கிடைத்தது எனது வரம்
என் தந்தையின் பாடல்கள் சொக்கதங்கம்
அவர் எங்கள் காட்டில் சிங்கம்
என் தந்தையின் வரிகள் முத்து
அவர்தான் எங்களின் சொத்து
என் தந்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்
அவர் இல்லை என்று நெஞ்சம் சில நேரம் வலிக்கும்
என் தந்தைக்கு என் அம்மா ஒரு அழகிய ரோஜா
எப்பொழுதும் அவர் பாடல்களில் அவர் தான் ராஜா
எனக்கும் என் தங்கைக்கும் நீங்கள் தான் அப்பா
இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்தால் என்ன தப்பா