சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ தொடர் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் 850 எபிசோடுகளை கடந்து சன் டிவியில் அதிக எபிசோடுகள் ஒளிபரப்பான தொடர் என்ற பெருமையையும் பெற்றது.
இந்த சீரியலில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்த விஜயராஜ் திடீர் மாரடைப்பால் கலமாகியுள்ளது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனியை பூர்விகமாகக் கொண்ட இவர் மெட்டி ஒலி, கோலங்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
எம்டன் மகன், காதலும் கடந்து போகும், செம போத ஆகாத ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபகாலமாக சீரியல், பட வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால் மன அழுத்தத்தில் இருந்ததாகச் சொல்கிறார்கள் உறவினர்கள். சில மாதங்களுக்கு முன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அது குறித்துப் பேசிய போது கண் கலங்கியிருக்கிறார்.
தீபாவளியைக் கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து பழனி சென்றிருந்த நிலையில் அங்கு மரணமடைந்திருக்கிறார். விஜயராஜின் மனைவி ராமலட்சுமி பழனி அருகேயுள்ள ஆயக்குடியைச் சேர்ந்தவர். ஒரே மகள் ஐஸ்வர்யா இரண்டாவது படிக்கிறார்.