சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் நடிகர் சாய் சக்தி. இவர் நிறைய டிவி தொடர்களில் நடித்து உள்ளார். இவர் டிவி தொடர்களில் மட்டுமில்லாமல் ஜோடி, கிச்சன் சூப்பர் ஸ்டார், குக் வித் கோமாளி போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்களை மகிழ்வித்து உள்ளார். இந்நிலையில் நடிகர் சாய் சக்தி கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சாய் சக்திக்கு ஏற்கனவே 2013 ஆம் ஆண்டு சென்னை பெண் ஒருவருடன் திருமணம் நடந்தது. ஆனால், சில ஆண்டுகளிலேயே இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
இந்நிலையில் நடிகர் சாய் சக்தி தன்னுடைய சொந்தகார பெண் ஒருவரை மறுமணம் செய்து கொள்ள இருக்கிறார். இது குறித்து சாய்சக்தி இடம் கேட்டபோது அவர் கூறியது, நான் விவாகரத்து பெற்று இரண்டு வருடம் ஆகிவிட்டது. எனக்கு தனிமை மிகவும் மன அழுத்தத்தைத் தருகிறது. அதனால் வீட்டில் எனக்கு இன்னொரு வாழ்க்கையை ஏற்பாடு செய்ய முயற்சி செய்துள்ளார்கள்.
மும்பையில் இருக்கிற என்னுடைய சொந்தகார பெண் ஒருத்தரோடு தான் எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இருவீட்டாரின் சம்மதத்துடன் தான் இந்த திருமணம் நடக்கிறது. மேலும், திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க சமயத்தில் தான் இந்த கொரோனா வந்துவிட்டது. கொரோனா முடிந்ததும் கல்யாணம் வைத்துக் கொள்ளலாம் என்று நாங்கள் முடிவு செய்து இருந்தோம்.
ஆனால், இந்த வருடம் முடிந்தால் கூட இந்த கொரோனா முடியாது போலிருக்கிறது. அதனால் எங்களுடைய திருமணத்தை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் நான் இருக்கிற சென்னையில் கோரோணா உச்சம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அவர்கள் இருக்கிற மும்பையிலும் இதே நிலைமை தான் என்று கூறினார்.