மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் அபர்ணா பாலமுரளி. 2015-ஆம் ஆண்டு வெளி வந்த மலையாள திரைப்படம் ‘ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா’. இந்த படத்தினை இயக்குநர்கள் ஜெக்ஸ்சன் ஆண்டனி – ரெஜிஸ் ஆண்டனி இணைந்து இயக்கியிருந்தனர். இதில் அம்ரிதா உன்னி கிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை அபர்ணா பாலமுரளி. இது தான் அபர்ணா பாலமுரளி அறிமுகமான முதல் மலையாள திரைப்படமாம்.
இதனைத் தொடர்ந்து இவர் நடித்த மலையாள படம் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’. இதில் ஹீரோவாக ஃபஹத் ஃ பாசில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்துக்கு பிறகு மலையாள திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை அபர்ணா பாலமுரளி, அடுத்ததாக தமிழ் திரையுலகில் நுழையலாம் என முடிவெடுத்தார்.
தமிழில் 2017-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘8 தோட்டாக்கள்’. இந்த படத்தினை இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக வெற்றி நடித்திருந்தார். வெற்றிக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி டூயட் பாடி ஆடியிருந்தார். இது தான் நடிகை அபர்ணா பாலமுரளி தமிழ் சினிமாவில் என்ட்ரியான முதல் திரைப்படமாம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.
இதனைத் தொடர்ந்து ‘சர்வம் தாள மயம்’ என்ற தமிழ் படத்தில் நடித்தார் நடிகை அபர்ணா பாலமுரளி. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தினை பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கியிருந்தார். இப்போது ‘சூரரைப் போற்று’ என்ற ஒரு தமிழ் திரைப்படம் மட்டும் கைவசம் வைத்திருக்கிறார் நடிகை அபர்ணா பாலமுரளி.
இந்த படம் நடிகை அபர்ணா பாலமுரளிக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இதில் ஹீரோவாக தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான சூர்யா நடித்திருக்கிறார். இந்த படத்தினை பிரபல இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருக்கிறார். தற்போது, இப்படம் தொடர்பாக நடிகை அபர்ணா பாலமுரளி பேசுகையில் “இந்த படத்துக்கான ஆடிஷன் போனபோது இப்படத்தின் ஹீரோ சூர்யா என்றும், அவருக்கு ஜோடியாக தான் நடிக்கப்போகிறோம் என்றே தெரியாமல் தான் சென்றேன். இதன் இயக்குநர் சுதா கொங்கரா என்ற தகவல் மட்டுமே அப்போது எனக்கு தெரியும்” என்று தெரிவித்திருக்கிறார்.