நடிகர் கார்த்திக் அவர்கள் தனது அண்ணி ஜோதிகாவுடன் முதல் முறையாக இணைந்து “தம்பி” என்ற படத்தில் நடித்து உள்ளார். உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தை இயக்கிய இயக்குனர் ஜீத்து ஜோசப் தான் இந்தப் படத்தையும் இயக்குகி உள்ளார். அதோடு கார்த்திக்கின் அக்காவாக ஜோதிகா நடிக்கிறார். மேலும், இவர்களுக்கு அம்மா, அப்பாவாக சீதா, சத்யராஜ் ஆகியோர் நடித்து உள்ளார்கள். அதோடு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி நடித்து உள்ளார். பொதுவாக தமிழ் சினிமாவில் அண்ணன்–தங்கை, அண்ணன்— தம்பி பாச கதைகள் தான் அதிகம் பார்த்திருப்போம்.
இந்நிலையில் அக்கா– தம்பி பாசம் கொஞ்சம் கம்மி தான். சமீபத்தில் வெளிவந்த சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் அக்கா– தம்பி பாசத்தை சொல்லி இருந்தார்கள். மேலும், இந்த படம் சூப்பர் ஹிட் கொடுத்தது என்று சொல்லலாம். இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகளும், நிறைய சஸ்பென்ஸ் காட்சிகளும் வைத்து உள்ளார் இயக்குனர். கோவிந்தன் இந்த படத்திற்கு இசை அமைத்து உள்ளார். மேலும், அதிரடி ஆக்ஷன், சண்டைக் காட்சிகளும், அக்கா-தம்பி பாச போராட்டமும் நிறைந்த படமாக தம்பி படம் இன்று வெளியாகி உள்ளது. டேய் தம்பி வந்துட்டாண்டா!!!! போய் பார்க்கலாமா…
கதைக்களம்:
ஹீரோ கார்த்திக்(விக்கி) கோவிலில் ஒரு திருடனாக செல்வாக்கான வாழ்க்கையை ஜாலியாக கொண்டாடி வாழ்பவர். ஊட்டியில் பெரும் அரசியல் புள்ளியாக இருப்பவர் சத்யராஜ். அவருடைய மனைவி நடிகை சீதா. சத்யராஜ் அம்மா சவுகார் ஜானகி. சவுகார் ஜானகி அவர்கள் வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இவர்களுக்கு மகளாக ஜோதிகா நடித்து உள்ளார். ஜோதிகாவின் தம்பி, சத்யராஜ் மகன் தான் சரவணன். அக்கா ஜோதிகா வீட்டை விட்டு ஓடிப் போன தம்பி சரவணன் திரும்பி வருவார் என்று 15 ஆண்டுகளுக்கு மேலாக நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். ஒரு நாள் கார்த்திக்கை (விக்கி) போலீஸ் துரத்துகிறது. அதற்கு பின் தான் அவருடைய வாழ்க்கையே மாறிப் போகிறது.
சத்யராஜ் அவர்கள் கார்த்திக்(விக்கி) தன் மகன் என்று நினைத்து வீட்டிற்கு அழைத்து வருகிறார். மெல்ல மெல்ல கார்த்திக் அவர்கள் சத்யராஜ் குடும்பத்தோட பழகுகிறார். அக்கா ஜோதிகாவிற்கு தொலைந்து போன தன் தம்பியை நினைத்து சந்தோஷம் ஒருபக்கம், இத்தனை வருடங்களாக திரும்பி வரவில்லை என்ற கோபம் ஒரு பக்கதோடு இருக்கிறார். சரவணனின் காதலியாக அறிமுகமாகிறார் சஞ்சனா. பின் சரவணன் வருகையை அறிந்து சந்தோஷப்பட்டு அவரை காதலிக்க செய்கிறார். இதனை தொடர்ந்து மலைவாழ் மக்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. மலைவாசி மக்கள் கார்ப்பரேட் நிறுவனத்தின் மூலம் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். மலைவாசி மக்கள் நிலத்திற்காக சத்யராஜ் போராடி வருகிறார்.
இதனால் சத்யராஜ் அவர்களுக்கு பிரச்சினைகள் தொடர்ந்து வருகிறது. பின் கார்த்திகை கொலை செய்ய முடிவெடுக்கிறார்கள். உண்மையிலேயே சத்யராஜின் மகன் யார்? கார்த்திக் எதற்காக இந்த வீட்டிற்கு வந்தார்? சத்யராஜின் மகன் எதனால் காணாமல் போனார்? கொலைகார கும்பலில் இருந்து கார்த்திக் தப்பிக்கிறாரா?? கார்த்திகை ஏன் கொலை செய்ய நினைக்கிறார்கள்?? கடைசியில் ஜோதிகா தன் தம்பியை ஏற்றுக் கொள்கிறாரா?? என பல முடிச்சுகள் அவிழ்ப்பது தான் மீதி கதை. கார்த்திக் தம்பி படத்தில் ஒரு திருடனாகவும், மகனாகவும் அற்புதமாக நடித்து உள்ளார்.
மேலும், தைரியமான பெண்ணாக, கண்டிப்புடனும் பாசத்துடன் இருக்கும் அக்கா கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக ஜோதிகா நடித்துள்ளார். ஜோதிகா அவரின் கோபம் அமைதி எல்லாம் வேற லெவல்ல உள்ளது. நடிகர் சத்யராஜ் அவர்கள் வழக்கம் போல் இந்த படத்திலும் தூள் கிளப்பியுள்ளார். ஒரு தந்தையாகவும், ஊர் தலைவராகவும் வரும் பிரச்சனைகளை சமாளித்து கொண்டு அவருடைய கதாபாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார். காமெடி, ஆக்ஷன், காதல், பாசம்,கோபம் என அனைத்தும் கலந்த கமர்ஷியல் படமாக தம்பி உள்ளது. கோவிந்தன் இசையில் பாடல்களும் ஒன்றும் அலப்பறை இல்லாமல் உள்ளது.
பிளஸ்:
படத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி ஆக உள்ளது.
படத்தின் இசை அலப்பறைகள் இல்லாமல் உள்ளது.
அக்கா– தம்பி பாசம் உணர்வுப் பூர்வமான கதை ஆக உள்ளது.
சத்யராஜ், ஜோதிகா, கார்த்திக் இவர்களின் நடிப்பு புதுமையாக இருந்தது.
மைனஸ்:
முதல் பாதி மெதுவாக செல்வது போன்று ஒரு ஏக்கம்.
படம் பெரிதாக சொல்லி கொள்ளும் அளவு இல்லை.
படத்தின் காமெடிகள், ரோமன்ஸ் கொஞ்சம் இருந்திருக்கலாம்.
படத்தின் அலசல்:
இந்த படத்தில் இயக்குனர் போட்டு விட்ட அனைத்தும் முடிச்சுகளும் சுவாரசியமாக இருந்தது. அடுத்தது என்ன அடுத்தது என்ன என்ற ஆர்வத்துடன் ரசிகர்களை பார்க்கத் தூண்டிய படம். மொத்தத்தில் தம்பி படம் கார்த்திக்கு பக்க பலம். நம்மை கதை உள் நோக்கி செல்ல வைக்கிறது.