ஒட்டுமொத்த உலகையும் இந்த கொரோனா வைரஸ் உலுக்கி கொண்டு இருக்கிறது. இந்தியாவில் 834 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் மற்றும் 19 பேர் உயிர் இழந்து உள்ளார்கள். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கொரோனா வைரஸை எதிர்த்து அரசாங்கம், காவல்துறை, மருத்துவர்கள் என அனைத்து துறையும் போராடி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்று பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க போலீசார் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அரசாங்கம் விதித்த அறிவிப்பையும் மீறி ஒரு சில பொதுமக்கள் வெளியே வருவதால் போலீசார் தடியடி நடத்தி வீட்டுக்கு செல்ல அறிவுறுத்தி வருகின்றனர்.
அதேபோல் சில மாநிலங்களில் காவல்துறையினர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது குறித்த வீடியோக்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் டிரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் அவர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருந்தது, என்ன ஒரு முட்டாள்தனம். காவல்துறை அதிகாரிகள் தங்களுடைய உயிரை ஆபத்தில் வைத்து நம்மை காத்துக் கொண்டு வருகிறார்கள். இப்படி அவர்களிடம் நீங்கள் நடந்து கொள்வது சரியா?? நீங்கள் அவர்களுக்கு செய்யும் கைமாறு இதுதானா?? இது மிகவும் வெட்கப்பட பட கூடிய செயல். இந்த முட்டாள்களின் சார்பாக நான் காவல்துறை அதிகாரியிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் என்று கூறியிருந்தார்.
பின் பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடி குறித்தும் வரலக்ஷ்மி கூறியிருப்பது, இது எப்போதும் ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருக்கிறது என்பதை காட்டுகிறது. காவல்துறையால் மக்களை அடிக்க முடியாது. இது ஒரு ஊரடங்கு. மக்களை அடிக்கும் அளவுக்கு குற்றமல்ல. இது கண்டிக்கப்பட வேண்டியது. பதட்டமும், பயமும் அதிகமாக இருப்பதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருங்கள். இன்னும் இந்த நிலைமை மோசமாக வேண்டாமென பதிவிட்டுள்ளார்.
நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார். தமிழில் இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வந்த ‘போடா போடி’ படத்தில் அறிமுகமானார். அதன்பின்னர் பல்வேறு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது இவர் ‘சேசிங்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.