வெற்றி துரைசாமி குறித்து இயக்குனர் வெற்றிமாறன் உருக்கமுடன் பேசி இருக்கிறார்.சென்னை மாநகரின் முன்னாள் மேயர் துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் 9 நாட்களுக்கு பின் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கி இருகிறது. கடந்த பிப்ரவரி நான்காம் தேதி இமாச்சல் பிரதேசத்தின் இன்னவோர் மாவட்டத்தில் உள்ள வாங்கி நாளா அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வெற்றி துரைசாமியின் கார் விபத்துக்குளானது.
இந்த விபத்தில் கார் ஓட்டுநர் உயிரிழந்த நிலையில் வெற்றி துரைசாமியின் நண்பர் கோபினாத், படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். வெற்றி துரைசாமியின் உடல் மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது அவரது உடலை மீட்புக்குழிவினர் தேடி வந்தனர். இப்படி ஒரு நிலையில் வெற்றி துரைசாமியின் சடலம் 9 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெற்றியின் உடல், சட்லஜ் நதியில் 6 கி.மீ தொலைவில் கிடைத்துள்ளது.
வெற்றி துரைசாமியின் உடல் நேற்று முன் தினம் (பிப்.13) சென்னை கொண்டுவரப்பட்டது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து இருந்தனர். அதிலும் குறிப்பாக வெற்றி துரைசாமியின் நெருங்கிய நண்பரான அஜித் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். வெற்றி துரைசாமி ஒரு சாகச விரும்பி மற்றும் புகைப்பட கலைஞர். மேலும், ஆரம்பத்தில் சினிமா துறையில் இருந்தவர்.
வெற்றி துரைசாமி இயக்குனர் வெற்றிமாறனுடன் உதவி இயக்குனராக பணியாற்றிவர். இப்படி ஒரு நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் தனது ‘IIFC’ கல்வி நிறுவனத்தின் சார்பாக இரங்கல் கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தார். இந்த கூட்டத்தில் பேசிய அவர் ‘ எப்போதும் சிரித்துக்கொண்டு, அன்புடன் பழகும் மனிதர். மனிதர்களுடன் மட்டுமல்லாமல், அனைத்து உயிர்களுடனும் அன்பாக இருக்கும் மனிதர். அவருடைய மறைவு ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு.
என்கிட்டதான் சினிமா கற்றுக்கிட்டதாகச் சொல்வார். ஆனால், உண்மையில் அவர்தான் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறார். கடந்த பத்து ஆண்டுகளாக நான் செய்த பணிகள் அனைத்திலும் அவரது பங்கு ஏதோவொரு விதத்தில் இருந்திருக்கிறது. அதனுடைய உச்சமாக தான் ஐஐஎஃப்சி என்ற பிலிம் இன்ஸ்டிடியூட்டுக்கு இடம் கொடுத்தார். அவர் முன்வரவில்லை என்றால் இன்னும் எத்தனை காலம் ஆகியிருக்கும் என தெரியவில்லை.
பறவைகள், தோட்டத்திற்கு மாடுகள், வீட்டிற்கு இசைக் கருவிகள் என நான் வாங்க விரும்புவதை, அவரே முன் வந்து வாங்கிக் கொடுத்திருக்கிறார். இப்படி என்னுடைய நிறைய விஷயத்தில் அவரது பங்கு இருந்து கொண்டேதான் இருக்கிறது.அவரின் நினைவாக எங்கள் ‘IIFC’ சார்பில் விருதுகள் வழங்கலாம் என்று நினைத்துள்ளோம். அவ்வகையில் ‘IIFC’- சார்பாக முதல் தமிழ் படம் எடுப்பவர்களுக்கும், வைல்டு லைஃப் போட்டோ எடுப்பவர்களுக்கும் அவரது பெயரில் விருது வழங்கத் திட்டமிட்டுள்ளோம்’ என்று கூறியுள்ளார்.