தன் மகளின் மரணம் குறித்து சித்ராவின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜே சித்ரா. இவர் தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். இவர் முதன் முதலாக மக்கள் டிவியில் தொகுப்பாளினி தான் மீடியாவுக்குள் நுழைந்தார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பேரும் புகழும் ஏற்படுத்தி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சித்ராவை யாராலும் மறக்க முடியாது. தான் வாழ்ந்த கடைசி நாட்களில் முல்லை என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சித்ரா. இவருடைய மரணம் இன்றும் யாராலும் நம்பவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அந்த அளவிற்கு ரசிகர்கள் முதல் சின்னத்திரை பிரபலங்கள் வரை மனதை பாதித்த ஒன்று. இவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து தன்னுடைய கடும் உழைப்பினாலும், விடா முயற்சியினாலும் இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருந்தார் சித்ரா.
சித்ரா தற்கொலை :
இப்படி உச்சத்தில் இருந்த சித்ரா தூக்கிட்டு மர்மமான முறையில் இறந்த சம்பவம் பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சித்ரா சீரியல் ஷூட்டிங்குக்காக பூந்தமல்லி அருகே பெங்களூரு பைபாஸ் சாலையில் அமைந்திருக்கும் ஹோட்டலில் தனது கணவர் ஹேமநாத்துடன் தங்கியிருந்தார். அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டு இருந்தார். இவர் தற்கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் அவர் கணவர் ஹேமநாத் முழுக்க என்று அவர் பெற்றோர்கள் புகார் அளித்து இருந்தார்கள். அதன் பெயரில் ஹேம்நாத்தை போலீஸ் கைது செய்து இருந்தது.
கணவர் கைது :
அதன் பின் அவர் ஜாமீனில் வெளியே வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதோடு சித்ரா இறந்து இரண்டு ஆண்டு முடிந்துவிட்டது. ஆனால், இவருடைய திடீர் மரணத்திற்கு காரணம் என்ன? தற்கொலையா? கொலையா? அதற்கு காரணமானவர்கள் யார்? சித்ராவிற்கு நீதி கிடைத்ததா? என்று இன்னும் விடை தெரியாமல் இருக்கின்றது. இப்படி ஒரு சூழ்நிலையில் சித்ரா மரணத்திற்கு அரசியல்வாதிகள் தான் காரணம். என் உயிர்க்கும் ஆபத்து இருக்குது. எனக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை என்று ஹேமநாத் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். இப்படி இவர் கூறியதை அடுத்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது.
சித்ரா தந்தை அளித்த மனு:
இதனை அடுத்து சித்ராவின் இறப்பு குறித்து இன்னும் வழக்கு நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், தீர்ப்பு கிடைத்தப்பாடு இல்லை. இந்த நிலையில் சித்ராவின் மரணம் குறித்த வழக்கை அவருடைய தந்தை மீண்டும் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்து இருக்கிறார். அதாவது, சித்ரா வழக்கு திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கு. அதை சென்னையில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்றும் சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருக்கிறார்.
மனுவில் இருப்பது:
அந்த மனுவில், சித்ராவின் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கவேண்டும். இதுவரை விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. விசாரணையை இழுத்தடிக்க ஹேம்நாத் வேண்டுமென்றே பல மனுக்களை தாக்கல் செய்து இருக்கிறார். அதோடு நாங்கள் விசாரணைக்காக திருவள்ளூர் சென்று வருவது சிரமமாக இருக்கிறது. வழக்கில் சாட்சிகளாக உள்ள நபர்கள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலேயே இருப்பதால் வழக்கை திருவள்ளூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறி இருக்கிறார்.