தற்போது தமிழ் சினிமா உலகில் காமெடி மன்னாக திகழ்ந்து வருபவர் நடிகர் யோகிபாபு தான். ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்து இருந்தாலும் தற்போது முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். மேலும், இவர் தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு. இந்த ஆண்டு மட்டும் இவரது கைவசம் 19 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் உள்ளது. சமீபத்தில் யோகி பாபுவிற்கு திருமணம் ஆகிவிட்டது என்று பல வதந்திகள் சோசியல் மீடியாவில் வந்தது. ஆனால், அது எல்லாம் பொய் என்றும் கூறி இருந்தார் யோகி பாபு.
தற்போது ஒரு வழியாக சில தினங்களுக்கு முன்பு தான் காமெடி நடிகர் யோகி பாபு திருமணம் செய்து கொண்டார். இவர் வேலூரை சேர்ந்த மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். யோகி பாபு அவர்கள் குலதெய்வ கோவிலில் மிகவும் சிம்பிளாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் திரைபிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. நெருங்கிய உறவினர் மற்றும் சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த ரகசியம் திருமணம் குறித்து யோகி பாபு அவர்கள் தற்போது பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியது, எதிர்பாராதவிதமாக குடும்ப சூழ்நிலை காரணமாக அவசர அவசரமாக என்னுடைய திருமணம் நடந்து முடிந்தது. அதனால் யாருக்கும் முறைப்படி அழைக்கவும், சொல்லவும் முடியவில்லை. திருமணத்தில் பலபேரின் வாழ்த்துக்களையும் பெறவும் முடியவில்லை என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது. அனைவரும் என்னுடைய குடும்ப சூழலை புரிந்து கொள்ள வேண்டும் என்று தான் நான் இங்கு சொல்ல விரும்புகிறேன். சில சம்பவங்கள், எதிர்பாராத சூழ்நிலைகள் தான் என்னுடைய அவசர திருமணத்திற்கு காரணமானது. என்ன முடிவெடுப்பது என்று நான் குழப்பமான நிலையில் இருந்தேன்.
இரண்டு குடும்பத்தாரரிடம் உட்கார்ந்து பேசி சில முடிவுகள் எடுத்தோம். என் திருமணத்திற்கு முறைப்படி நான் யாரையும் அழைக்கவில்லை என்ற வருத்தமும் கோபமும் பலருக்கு இருக்கலாம். ஆனாலும், என்னை தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக்கள் சொன்னவர்களுக்கும், சமூக வலைத்தளங்களில் என்னுடைய படத்தை வெளியிட்டு வாழ்த்துக்கள் சொன்னவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மார்ச் மாதம் என்னுடைய திருமண வரவேற்பு நடைபெற உள்ளது. அனைவரையும் அழைத்து உங்கள் வாழ்த்துகளை பெற விரும்புகிறேன். விரைவில் உங்களை நான் சந்திப்பேன் என்று புன்னகையுடன் கூறினார். திருமணம் சிம்பிளாக நடந்தாலும் ரிசாப்ஷனை வெகு சிறப்பாக செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதில் பல்வேறு சினிமா பிரபலங்களும் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.