சமீப காலமாக உச்ச நீதி மன்றம் பல சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கி வருகிறது. ஓரினச்சேர்க்கை குற்றமில்லை, திருமணத்திற்கு பின் தகாத உறவு குற்றமில்லை போன்ற தீர்ப்புகளை தொடர்ந்து சபரி மலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்பை வழங்கி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த செப்டம்பர் 30 வெளியான நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த தீர்ப்பை அடுத்து ஒரு சில பெண்கள் சபரி மலை கோவிலுக்கு செல்ல முயன்றனர்.ஆனால், அவர்களை ஐயப்ப பக்தர்கள் கோஷங்களை முழங்கி திருப்பி அனுப்பினார்கள். சபரி மலை விவகாரத்தால் அங்கே பதற்றமான சூழ்நிலை உருகியுள்ளது.
இந்த நிலையில், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு சபரிமலையில் காணிக்கை வருமானம் குறைந்துள்ளது. அது மட்டுமல்லாமல், உண்டியலில் பணத்துக்குப் பதில் ‘சாமி சரணம், சேவ் சபரிமலா’ என்ற துண்டுச்சீட்டுகள்தான் அதிகமாக போடப்பட்டுள்ளன. இதனால், தேவசம் போர்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சபரிமலை சன்னிதானம் மற்றும் பம்பையில் உள்ள செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை, கேரள அரசுக்கு எச்சரித்துள்ளது, உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து சன்னிதானம் மற்றும் பம்பையில் இருந்து அனைத்து பத்திரிகையாளர்கள் வெளியேற வேண்டும் என்று கேரள காவல்துறை இன்று உத்தரவிட்டுள்ளது.அதே போல கலவர எச்சரிக்கையால் இன்று சன்னிதானமும் மூடப்பட்டது.