தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஷால். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது. தற்போது நடிகர் சங்கத்தின் தலைவராக விஷால் திகழ்கிறார். இவர் சாலிகிராமம் காவேரி ரங்கன் நகரில் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். சாலிகிராமம் ரத்தினம்மாள் பகுதியைச் சேர்ந்த ரம்யா என்பவர் இந்த நிறுவனத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு கணக்காளராக பணியில் சேர்ந்து பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் விஷால் ஃபிலிம் ஃபேக்டரியின் மேனேஜரான ஹரி கிருஷ்ணன் அவர்கள் நேற்று இரவு விருகம்பாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் தங்களது நிறுவனத்தில் பணிபுரிந்த கணக்காளர் ரம்யா ரூபாய் 45 லட்சம் மோசடி செய்துள்ளதாக புகார் அளித்து உள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு முதலே விஷால் ஃபிலிம் ஃபேக்டரி வருமான வரித்துறைக்கு கட்டவேண்டிய டிடிஎஸ்(TDS) தொகையில் இருந்து பணம் காணாமல் போவது வழக்கமாகி இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நிறுவனத்தார்களை சோதனை செய்தபோது கணக்காளர் ரம்யா டி.டி.எஸ் தொகையிலிருந்து தனது கணவரான தியாகராஜன் என்பவரின் பர்சனல் வங்கி கணக்கிற்கும், தனது உறவினர்கள், நண்பர்களின் வங்கி கணக்கிற்கும் சிறுக சிறுக பணத்தை அனுப்பி வைத்து உள்ளார். மொத்தம் இதுவரை ரம்யா ரூபாய் 45 லட்சம் பணம் அனுப்பி மோசடி செய்திருப்பதை நிறுவனத்தார்கள் கண்டுபிடித்து உள்ளார்கள். அதனால் விஷால் ஃபிலிம் ஃபேக்டரியிலிருந்து பணமோசடி செய்த கணக்காளர் ரம்யாவை கைது செய்யும் படி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்கள்.
மேலும், கணக்காளர் ரம்யா மோசடி செய்யப்பட்ட ரூபாய் 45 லட்சம் பணத்தை பெற்றுத் தர வேண்டும் என்று நிறுவன மேலாளர் ஹரிகிருஷ்ணன் குறிப்பிடப்பட்டிருந்தார். புகாரை பெற்றுக் கொண்டு விருகம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு நடிகர் விஷால் தரப்பில் இருந்து என்ன பதில் வரும் என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.