அன்னபூரணி படம் மத உணர்வுகளை புண்படுத்துவாதாக சர்ச்சை எழுந்த நிலையில் தற்போது இந்த விவகாரம் தொடர்பாக நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்த்துடன் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நயன்தாரா சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் நயன் நடிப்பில் வெளியான அன்னபூரணி படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
View this post on Instagram
சமீபத்தில் தான் இந்த படம் netflix தளத்திலும் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்த படம் மத உணர்வை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், லவ் ஜிகாத்தை ஆதரிக்கும் விதமாக இருப்பதாகவும் மும்பையை சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ்சோலங்கி என்பவர் மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து இந்த படம் NETFLIX தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இப்படி ஒரு நிலையில் அன்னப்பூரணி பட விவகாரம் குறித்து வருத்தம் தெரிவித்து தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று மூன்று மொழிகளில் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நயன்தாரா. அதில் '"ஜெய் ஸ்ரீ ராம்... எனது நடிப்பில் வெளியான 'அன்னபூரணி' திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளாகியிருப்பது குறித்து கனத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடனும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

'அன்னபூரணி' திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே 'அன்னபூரணி' திரைப்படத்தை நாங்கள் உருவாக்கினோம். அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம்.

தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் OTTயில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று. மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவுக்கும் துளியும் இல்லை. கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன்.
அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல. எனது 20 ஆண்டுகால திரை பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் அது நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும், மற்றவர்களிடமிருந்து நல்லவற்றை கற்றுக் கொள்வதும் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்." இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

நயன்தாராவின் இந்த அறிக்கையில் ஆரம்பத்தில் ஜெய் ஸ்ரீராம் என்று குறிப்பிட்டத்தற்கு காரணமே இந்த படத்திற்கு வடக்கில் இருந்து குவிந்த எதிர்ப்புகள் தான் காரணம் என்று பலரும் கூறி வருகின்றனர். அதே போல இதனை உறுதிபடுத்தும் விதமாக நயன்தாரா இந்தியில் வெளியிட்ட அறிக்கையை மட்டும் தனியாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு இருக்கிறார். இதனால் பலரும் டயனாவேயே ஜெய் ஸ்ரீராம் சொல்ல வைத்துவிட்டார்கள் என்று கூறி வருகின்றனர்.






