ஆஸ்கர் நாயகன் என்ற அந்தஸ்துடன் என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஏ ஆர் ரகுமான். அதோடு இவர் இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான இசை அமைப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர். இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் தான் இவர் இசை அமைப்பாளராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். மேலும், அறிமுகமான முதல் படத்திலேயே தேசிய விருதை தட்டி சென்றவர். இதை தொடர்ந்து குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் ஆஸ்கர் விருது பெற்று உலக அளவில் புகழப்பட்டவர். இந்நிலையில் ஏ ஆர் ரகுமான் அவர்கள் தற்போது பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் ரஜினி குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நான் இதுவரை ரஜினி படங்களுக்காக தான் அதிகமாக உழைத்து இருக்கிறேன்.
ஏன்னா, பொதுவாக ரஜினி நடிக்கும் படங்களை மார்ச் மாதத்தில் தொடங்கி தீபாவளிக்கு படம் ரிலீஸ் என்பார்கள். இதனால் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் எல்லோரும் மும்முரமாக பட வேலையில் இருப்பார்கள். அதனால் படம் வெளியாகும் கடைசி நேரத்தில் தான் பின்னணி இசையமைக்க என்னிடம் சொல்வார்கள். இதனாலேயே நான் மற்ற நடிகர்களின் படங்களை விட ரஜினி படங்களுக்கு பல இரவும் பகலும் தூங்காமல் உழைத்திருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் என்னுடைய ஸ்டுடியோ அமைந்துள்ள பகுதியில் அடிக்கடி பவர்கட் பிரச்சனை இருக்கிறது. இதனால் ஜெனரேட்டர் உதவியுடன் சிறிய நேரம் கூட வீணடிக்காமல் உழைப்பேன்.
மேலும், ரஜினி படம் என்பதால் மற்ற நடிகர்களின் படங்களை விட அவருடைய படத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழல். அது மட்டுமில்லாமல் அவருடைய படங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இப்படி ஆர் ரகுமான் கூறிய கருத்து தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து வருகிறது.