தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநராக வலம் வந்து கொண்டிருப்பவர் சுந்தர்.சி. 1995-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘முறை மாமன்’. இந்த படத்தினை சுந்தர்.சி இயக்கியிருந்தார். இது தான் சுந்தர்.சி இயக்கிய முதல் தமிழ் திரைப்படமாம். இதில் ஹீரோவாக ஜெயராம் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக குஷ்பூ டூயட் பாடி ஆடியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.
இதனைத் தொடர்ந்து ‘முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், ஜானகி ராமன், நாம் இருவர் நமக்கு இருவர், உன்னைத் தேடி, உனக்காக எல்லாம் உனக்காக, உள்ளம் கொள்ளை போகுதே, ரிஷி, அன்பே சிவம், வின்னர், கிரி, லண்டன், சின்னா, இரண்டு, கலகலப்பு 1 & 2, தீயா வேலை செய்யணும் குமாரு, ஆம்பள, வந்தா ராஜாவா தான் வருவேன், ஆக்ஷன்’ என அடுத்தடுத்து பல தமிழ் படங்களை இயக்கினார் சுந்தர்.சி.
தமிழ் திரையுலகில் ஒரு இயக்குநர் என்பதுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த சுந்தர்.சி, அடுத்ததாக ஹீரோவாகவும் அவதாரம் எடுக்க திட்டமிட்டார். 2006-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளி வந்த திரைப்படம் ‘தலைநகரம்’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் சுராஜ் இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகனாக சுந்தர்.சி நடித்திருந்தார்.
இது தான் சுந்தர்.சி ஹீரோவாக நடித்த முதல் தமிழ் திரைப்படமாம். ‘தலைநகரம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு ‘வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம், பெருமாள், தீ, இருட்டு’ போன்ற சில படங்களில் நடித்தார் சுந்தர்.சி. அதன் பிறகு அவரே இயக்கிய ‘நகரம் மறுபக்கம், அரண்மனை 1 & 2’ போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார் சுந்தர்.சி.
சுந்தர்.சி இயக்குநராவதற்கு முன்பு சத்யராஜின் ‘வாழ்க்கைச் சக்கரம்’ என்ற படத்தில் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாராம். இப்போது அந்த படத்தில் அவர் வந்த காட்சியின் ஸ்டில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு, சுந்தர்.சி இயக்கிய ‘முறை மாமன், அருணாச்சலம்’ ஆகிய படங்களிலும் அவர் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.