இளையதளபதி விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிகில் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் நெய்வேலியில் இருந்தபோது வருமானவரித் துறையினர் அங்கிருந்து விஜயை நேராக அழைத்து சென்று அவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள். விஜய் வீட்டில் மட்டுமல்லாமல் பிகில் படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது
மேலும், இந்த சோதனையில் வருமான வரி கணக்கில் காட்டப்படாத 77 கோடி ரொக்கப்பணம் மற்றும் கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்கள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் விஜய் வீட்டில் இருந்து எந்த ஆவணமும் சிக்கியதா இல்லையா என்று வருமான வரித்துறையினர் எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. வருமான வரித்துறையின் சோதனை முடிந்த நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நடைபெற்ற மாஸ்டர் படத்தின் படபிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டார் நடிகர் விஜய்.
இந்த நிலையில் வருமான வரி சோதனையின் போது வீடு , ஆலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரிக்க நடிகர் விஜய், பைனான்சியர் அன்பு செழியன் உள்ளிட்ட 3 நபர்களும் 3 நாட்களுக்குள் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பபட்டுள்ளது. எனவே, நடிகர் விஜய் இன்று(திங்கள்கிழமை) அல்லது நாளை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலத்தில் ஆஜராகி இதுகுறித்து விளக்கத்தை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க மாஸ்டர் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் இரண்டாவது சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த படத்தின் படபிடிப்பை காண ஆயிரகணக்கான ரசிகர்கள் திரண்டனர். ரசிகர்களை காண நடிகர் விஜய் வேன் மீது ஏறி ரசிகர்களுக்கு கை அசைத்து காட்டி ஏரளமான ரசிகர்களுடன் செல்ஃபீ எடுத்துக்கொண்டார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.