தெறி’, ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து விஜய் தன் அடுத்தப் படத்தையும் அட்லிக்குத்தான் தருவார் என்ற எண்ணம் பலருக்கும் இருந்தது. அதேபோல அட்லியும் ஃபாரின் பறந்து ஸ்கிரிப்ட் வேலைகளில் பரபரப்பாக இருந்தார். ஆனால், அவர் திரும்பி வந்ததும் கதை சொன்னது ரஜினிக்கு. அட்லி உள்பட ரஜினிக்கு ‘அருவி’ அருண், கார்த்திக் சுப்புராஜ் உள்பட சிலர் கதை சொல்லியிருந்தனர். அட்லி சொன்ன ஸ்கிரிப்டை கேட்ட ரஜினி, ‘போனில் தகவல் சொல்றேன்’ என்று கூறி அவரை வழியனுப்பி வைத்தார். அட்லியும் ரஜினி தனக்குத்தான் கால்ஷீட் கொடுப்பார் என்று நம்பி இருந்தார். ஆனால் கார்த்திக் சுப்புராஜை தேர்வு செய்தார் ரஜினி.
பிறகு விஜய்யை இயக்கும் முயற்சியில் இறங்கினார் அட்லி. விஜய் தன் அடுத்த படத்துக்கு ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதை அறிந்த அட்லி, விஜய்யின் அனுமதியுடன் ஏ.ஜி.எஸ்ஸுக்கு கதை சொன்னார். அவர் சொன்ன கதையை கேட்ட ஏ.ஜி.எஸ் நிறுவனம், ‘விஜய்யுடன் கலந்துபேசுகிறோம். அவர் ஓ.கே சொன்னால் நீங்கள்தான் டைரக்டர். அதில் எங்களுக்கு எந்தப் பிரச்னை இல்லை’ என்று அட்லியை அனுப்பிவைத்தனர்.
இதற்கு முன்னதாக இயக்குநர் மோகன் ராஜாவும் விஜய்க்கு கதை சொல்லியிருந்தார். இதற்கு முன் மோகன் ராஜா விஜய்யை வைத்து ‘வேலாயுதம்’ படத்தை இயக்கியவர். மேலும் ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்காக ‘தனி ஒருவன்’ என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தைத் தந்தவர். அவரை ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்கு கதை சொல்ல அனுப்பினார் விஜய். இந்த இரு இயக்குநர்கள் உள்பட வேறுசிலரும் கதைகளுடன் மோதியதால் ‘இயக்குநர் யார் என்று முடிவெடுக்கும் பொறுப்பை விஜய்யிடமே விட்டது ஏ.ஜி-எஸ் நிறுவனம். விஜய்யும் பல விஷயங்களை யோசித்து, தன் அடுத்தப் பட இயக்குநராக மோகன் ராஜாவை தேர்வு செய்துள்ளார்.
தெறி’, ‘மெர்சல்’ ஆகிய இரு படங்களும் வசூல், அதிக கவனம் ஈர்த்தது என விஜய்க்கு நற்பெயரையே வாங்கித் தந்தன. ஆனாலும் அட்லியைத் தவிர்த்து மோகன்ராஜாவை விஜய் தேர்வு செய்ய என்ன காரணம்? இந்தக் கேள்விக்கான பதில் தாணு, தேனாண்டாள் முரளி, விஜய்... என குறிப்பிட்ட ஒருசிலருக்கு மட்டுமே தெரியும். ஆனால், இந்த தவிர்த்தலுக்கான காரணத்தை அட்லி உணர்ந்தாரா இல்லையா என்பது நமக்குத் தெரியாது.




