தமிழ் மக்கள் மனதில் இன்றும் நீங்க இடம்பிடித்தவர் நடிகரும் முன்னாள் முதல்வருமான எம் ஜி ஆர். இந்த நிலையில் நடிகர் எம் ஜி ஆரின் அண்ணன் மகள் லீலாவதி இன்று காலமாகி இருக்கிறார். புரட்சி தலைவர் எம் ஜி ஆர் 1984ஆம் ஆண்டு எம்ஜிஆர் அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது, அவருக்குத் தன்னுடைய ஒரு சிறுநீகத்தை அளித்து எம்ஜிஆரின் வாழ்வை காப்பாற்றியவர் லீலாவதி. சிகிச்சை பெற்ற போது எம் ஜி ஆர் மயக்கத்தில் இருந்ததால் இந்த விஷயம் அவருக்கு தெரியவில்லை. பின்னர் சிகிச்சை முடிந்து பல நாட்கள் கழித்து இந்த விஷயம் தெரியவர லீலாவின் தியாகத்தை எண்ணி மனம் நெகிழ்ந்தார் எம் ஜி ஆர்.
எம் ஜி ஆரின் அண்ணன் மகள் லீலாவதி , சென்னையில் உள்ள பெருங்குடி பகுதியில் வசித்து வந்தார். கடந்த சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த லீலாவதி இன்று காலமானார். லீலாவதி மரணத்தை அடுத்து பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என்று அனைவரும் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து அஇஅதிமுக வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் ‘நமது இதய தெய்வம் நம்மை எல்லாம் ஆளாக்கிய கழக நிறுவனத்தலைவர் பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் மூத்த சகோதரர் திரு எம் ஜி சக்கரபாணி அவர்களின் அருந்தவப் புதல்வி திருமதி லீலாவதி அம்மையார் அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மனவேதனையும் அடைந்தோம்.
புரட்சித் தலைவர் அவர்கள் 1984இல் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது அவருக்கு தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை அளித்து நம் புரட்சித் தலைவரை வாழவைத்த போற்றுதலுக்குரிய பண்பாளர் திருமதி லீலாவதி அம்மையார் அவர்கள் 37 ஆண்டுகள் இப்பூவுலகில் ஒரு சிறுநீரக தோடு வாழ்ந்து இன்று இயற்கை எழுதியதை அழிந்த புரட்சித்தலைவரின் கோடான கோடி அன்பு தொண்டர்கள் அனைவரது நெஞ்சிலும் மிகுந்த வேதனை கொள்கிறது.
அன்புச் சகோதரி திருமதி லீலாவதி அம்மையார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது உற்றார் உறவினர்களுக்கும் இந்த துயரத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும் தைரியத்தையும் அளிக்க வேண்டுமென்றும் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் என்று அந்த துக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.