விஜய் டி.வியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவதாலேயே நிகழ்ச்சிப் பற்றிய அறிவிப்பு வந்த நாளிலிருந்து எதிர்பார்ப்பு சற்று அதிகம்தான். தமிழ் தொலைக்காட்சிகளில் ‘பிக் பாஸ்’ போல் ஒரு நிகழ்ச்சியை பார்வையாளர்கள் பார்ப்பது இதுதான் முதல்முறை. பிக் பாஸ் போட்டியாளர்களை பற்றி சமூக வலைதளங்களில் பல மீம்ஸ்களும் வருகின்றன.
இந்த நிகழ்ச்சி சாதாரண பார்வையாளர்களை மட்டுமின்றி சினிமா பிரபலங்களையும் கவர்ந்துள்ளது. பல பிரபலங்கள் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு ட்விட்டரில் தனது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் நிகழ்ச்சியைப் பற்றியும், அதே நேரத்தில் போட்டியில் பங்கேற்ற ஓவியாவின் புதிய ஹேர் ஸ்டைல் பற்றியும் ட்வீட் தட்டிருந்தார்.
இதுபற்றி இயக்குநர் ஆனந்த் ஷங்கரிடம் பேசினோம். ”யுகே மற்றும் இந்தியில் நடந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை இதுவரை பார்த்ததில்லை. அதனால் நிகழ்ச்சியைப் பற்றி தெரிந்துகொள்ளதான் முதலில் பார்க்க ஆரம்பித்தேன். ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சியாகவும் அதே நேரத்தில் ஒருவருடைய கேரக்டர் பற்றி ஆய்வு செய்யக்கூடியதாகவும் இருந்தது ‘பிக் பாஸ்’.
ஆடியன்ஸ் பலபேருக்கு ஓவியாவைப் பிடித்தது மாதிரியே எனக்கு ஓவியாவைப் பிடித்திருந்தது. குறைந்த நாளில் பலபேரின் மனதில் அவரது கேரக்டர் மூலமாகப் பெயர் வாங்கிவிட்டார். ஓவியா வீட்டுக்குள் இருந்தவரை நானும் அவருக்கு ஓட்டு போட்டேன். அவர் வெளியேறியதுக்குப் பிறகு, யாருக்கும் நான் ஓட்டு போடவில்லை. ஓட்டுயெல்லாம் நான் போடுவேன் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. நான் டி.வி நிகழ்ச்சியெல்லாம் எப்போதும் பார்க்க மாட்டேன். ஆனால், இந்த நிகழ்ச்சியை மட்டும் பார்ப்பேன்” என்றவரிடம் ஓவியாவை உங்கள் படங்களில் நடிக்க வைக்கும் எண்ணம் உள்ளதா என்று கேட்டோம்.
”சினிமாவைப் பார்க்காதவர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்து வருகின்றனர். ஹவுஸ் மேட்ஸ் எல்லோரும் இந்த நிகழ்ச்சியின் மூலமாக வீட்டில் இருப்பவர்களின் மனதில் பதிந்துவிட்டனர். அதனால் அவர்களின் மார்கெட் நிலைமை சற்று அதிகம்தான். என் படத்தில் ஓவியா நடித்தால் நன்றாகயிருக்கும் என்றிருந்தால் அவரை நடிக்க வைப்பேன்.’’
அடுத்த படம்..?
” எனக்கு ஆக்ஷன் கதைகள் பிடிக்கும். அதனால் எனது அடுத்த படத்தின் கதையிலும் ஆக்ஷன் இருக்கும். அடுத்த படத்துக்கான ஸ்க்ரிப்ட் எழுதி முடிக்கப்போகிறேன். இன்னும் நடிகர், நடிகைகள் முடிவு செய்யவில்லை. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்’’ என எதிர்பார்ப்புடன் முடித்தார் இயக்குநர் ஆனந்த் ஷங்கர்.