திரௌபதி படத்தைத் தொடர்ந்து மோகன் ஜி இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் ருத்ரதாண்டவம். இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி, தர்ஷா குப்தா, ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளார்கள். போதை பழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டது தான் ருத்ரதாண்டவம். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் ருத்ரதாண்டவம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை வாங்க பார்க்கலாம்…
கதைக்களம் :
போதைப் பொருள் கடத்தலை தடுக்கும் முயற்சியில் இறங்கும் காவல் ஆய்வாளராக ருத்ர பிரபாகரன் என்ற கதாபாத்திரத்தில் ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ளார். முதல் காட்சியில் பப் ஒன்றில் இளைஞர்கள் சிலர் போதை மருந்துகளை பெண்களுக்கு கொடுத்து பெண்களை தவறான முறையில் படம் எடுக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு வருகிறது. அதை விசாரித்து இதுவரை யாரும் பார்த்திராத வகையில் அந்த போதை பொருள் குழுவினரை பிடிக்கிறார் ரிச்சர்ட். பிறகு எதிர்பாராத விதமாக கொலை வழக்கு ஒன்றில் ரிச்சட் சிக்கிக்கொள்கிறார். அதன் பின்னணியில் ஜாதி பிரச்சினை உருவாகிறது.
பின்னர் ரிச்சர்ட் ரிஷி தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பது தான் படத்தின் மீதி கதை. திரௌபதி படத்துடன் ஒப்பிடும்போது ரிச்சர்ட் இந்த படத்தில் கொஞ்சம் தேறி இருக்கிறார் என்று சொல்லலாம். வில்லனாக கௌதம் வாசுதேவ் மேனன் நடித்து உள்ளார். வழக்கம் போல் கௌதம் வாசுதேவ் தன் படம் மாதிரி வசனங்கள் பேசி இருந்தாலும் நடிப்பில் கொஞ்சம் தடுமாறி உள்ளார். போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் ஜாதி, மத பிரச்சனைகள் எழுகிறது.
அதற்குப் பின்னாடி எழும் அரசியல் சார்ந்த பிரச்சினைகளை இயக்குனர் சொல்லி இருக்கிறார். குறிப்பாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தை PCR குறித்து ஒரு காவல் அதிகாரிக்கு ஏற்படும் பாதிப்பை படத்தில் தெளிவாக சொல்லி இருக்கிறார்.படத்தின் முதல் பாதி முழுவதும் ஒரு நேர்மையான, அநியாயத்தைக் கண்டால் பொங்கும் காவல் ஆய்வாளராக ரிச்சர்ட் நடித்திருக்கிறார். வழக்கமான காவல்துறை சம்பந்தப்பட்ட படங்களில் இந்த காட்சிகள் வந்ததால் கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆங்காங்கே ஹெலிகேம் ஷாட்கள் மூலம் படத்தை பிரம்மாண்டமாக காட்ட முயற்சித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஃபரூக் ஜே பாஷா. குறிப்பாக கடலில் இரண்டு படகுகள் செல்லும் காட்சியை மிக நேர்த்தியுடன் பதிவு செய்திருக்கிறார். பின்னணி இசை மூலம் படத்தை சுவாரஸியப்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜூபின். படத்தில் ஆங்காங்கே சில இடங்களில் தடுமாற்றம் இருந்தாலும் ஓரளவிற்கு படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
பிளஸ்:
போதைப்பொருள் கடத்தல் எப்படி நடைபெறுகிறது, போதைப்பொருள் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றை மிக அழுத்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்தினால் அவரது குடும்பம் எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பதை உணர்வுபூர்வமாக காட்சிகளால் விளக்கி இருக்கிறார்.
தன்னுடைய முந்தைய படமான திரௌபதி படத்தைவிட ரிச்சர்ட் இந்த படத்தில் தன்னுடைய நடிப்பில் கொஞ்சம் முன்னேறி இருக்கிறார்.
படத்தின் இசை மற்றும் பின்னணி படத்தின் கதைக்கு ஏற்றார் போல ஞாயப்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் ஜூபின். ஆனால், பாடல்கள் சொல்லிக்கொள்ளும் அளவு காதில் நிற்கவில்லை. ஃபரூக் பாஷாவின் ஒளிப்பதிவு போதை உலகத்தையும், கடத்தல் காட்சிகளையும் சரியாகப் பதிவு செய்துள்ளது.
படத்தில் கௌதம் மேனன் ராதாரவி தம்பி ராமையா என்று பல்வேறு பிரபலங்கள் நடித்தாலும் கௌதம் மேனனின் மிரட்டலான நடிப்பும் அவருக்கும் ரிச்சர்டுக்கும் இடையிளான காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலம்
மைனஸ் :
முதல் பாதி கொஞ்சம் க்ரைம் த்ரில்லராக படத்தை கடத்திக் கொண்டு சென்றாலும் இரண்டாம் பாதியில் வரும் நீதிமன்ற விவாத காட்சிகள் படத்திற்கு பெரிதளவு கைகொடுக்கவில்லை.
படத்தில் தர்ஷா குப்தா நன்றாக நடித்திருந்தாலும் அவரை சின்னத்திரையிலும், இன்ஸ்டாவில் கவர்ச்சி பெண்ணாகவும் பார்த்து பழகிய நமக்கு கதாநாயகியாக ஏற்றுக்கொள்ள இரு மனதாக தான் இருக்கிறது.
மேலும், படம் மிகவும் நீளமாக செல்கிறது. படத்தில் கிட்டத்தட்ட அரை மணி நேரம் கட் செய்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது.
படத்தின் மையக்கரு பலமாக இருந்தாலும் படத்தின் இயக்குனர் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
நாடகக் காதல், வசனம், சாதிப் பெருமிதம் இதிலும் உண்டு. கஞ்சா விற்பனை, போதைப் பொருட்களை விற்கும் சிறுவர்கள்- இளைஞர்கள் அனைவரும் ஒரே சமூகத்தை, வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவே சித்தரிக்கப்பட்டிருப்பதுதான் முரணாக உள்ளது.
இறுதி அலசல் :
ஏற்கனவே சொன்னது திரௌபதி படமும் சரி இந்த படமும் சரி இதுவரை யாரும் சொல்லாத ஒரு விஷயத்தை சொல்லி இருந்தாலும், ஒரு படமாக இந்த திரைப்படத்தை பார்த்தால் ஒரு சுமாரான திரைப்படம்தான், ஒரு முறை பார்க்கலாம். இருப்பினும் பல இயக்குனர்கள் தொடக்கூட நினைக்கும் பிரச்சனையை தைரியமாக எடுத்து இயக்கியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள். ஆனால் இந்த படத்தை பார்த்துவிட்டு ஆஹா ஓஹோ என்று பல்வேறு பிரபலங்கள் போல் அந்த அளவிற்கு இந்த படம் அமையவில்லை என்பதுதான் உண்மை. வெறும் மையக் கருத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு படத்தை சுவாரஸ்யமான படமாக எடுத்து விட முடியாது அதில் திரைக்கதை எவ்வளவு முக்கியம் என்பதை இந்த படத்தை நீங்கள் பார்த்தால் புரிந்து கொள்வீர்கள்.