விவாகரத்து குறித்து மனம் திறந்து நடிகை கிருத்திகா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை கிருத்திகா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த மெட்டி ஒலி சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். அதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார்.
பெரும்பாலும் இவர் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் தான் மிரட்டி கொண்டு வருகிறார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் என்ற தொடரில் மூத்த மருமகள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு நடனத்தின் மீதும் அதிக ஆர்வம். இதனால் இவர் பல நடன நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். குறிப்பாக, மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் இவர் நடனமாடி இருக்கிறார்.
நடிகை கிருத்திகா பேட்டி:
இந்த நிகழ்ச்சி முடிந்த உடனே இவருக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால், அந்த திருமணம் நிலைக்கவில்லை. திருமணமான சில காலத்திலேயே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டார். தற்போது இவர் தன்னுடைய மகனுடன் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை கிருத்திகா பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், தன்னுடைய விவாகரத்து குறித்து கூறியிருந்தது, நான் விவாகரத்து முடிவை உடனே எடுக்கவில்லை.
விவாகரத்து குறித்து சொன்னது:
திருமணம் ஆனதிலிருந்தே எங்களுக்குள் பல பிரச்சனைகள் வந்தது. அதற்குப் பிறகு எல்லாம் பேசி தான் இந்த முடிவு எடுத்தோம். அந்த சமயத்தில் எனக்கு இருந்த ஒரே கவலை என்னுடைய மகன் தான். பிற்காலத்தில் யாராவது தந்தை பற்றி கேட்கும் போது அவன் சங்கடப்படுவானோ? என்று நினைத்து தான் வருத்தப்பட்டேன். ஆனால், என்னுடைய அண்ணன் இவனுக்கு அப்பாவாக இருந்து வழி நடத்துகிறார். இதனால் எனக்கு அந்த கவலையும் இல்லை.
அண்ணன் குறித்து சொன்னது:
மேலும், கவலைப்படும் அளவிற்கு என்னுடைய அண்ணன் வாய்ப்பு கொடுப்பதில்லை. என்னுடைய அண்ணனுக்கு குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே இவன் பிறந்து விட்டான். அதோடு என்னுடைய மகனுக்கு ரோகினி நட்சத்திரம். இதனால் அப்பா, அம்மாவுடன் இருக்க மாட்டான். அண்ணனுக்கு தத்து கொடுக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தது. அந்த வகையில் என்னுடைய அண்ணனுக்கு நான் இவனை தத்து கொடுத்து இருக்கிறேன்.
மறுதிருமணம் குறித்து சொன்னது :
நான், அம்மா, அண்ணன், அண்ணி, அவர்களுடைய குழந்தைகள் எல்லோருமே ஒன்றாக தான் இருக்கிறோம். நான் தவறான முடிவெடுக்கவில்லை என்று நினைக்கிறேன். நான் அந்த கடினமான காலத்தை கடந்து வர எனக்கு என்னுடைய குடும்பம் தான் உதவியது. எனக்கு கணவனோடு வாழ முடியவில்லை என்ற வருத்தம் எல்லாம் இல்லை. அதை நான் ஏற்றுக் கொண்டேன். என்னுடைய அம்மாவிற்கு நான் இரண்டாவதாக கல்யாணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், எனக்கு அந்த விஷயத்தில் எண்ணம் இல்லை. ஒரு பேயிடமிருந்து தப்பித்து இன்னொரு பிசாசிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது இல்லையா? இந்த எண்ணம் தான் எனக்கு இருக்கிறது என்று கூறியிருந்தார்.