உலகநாயகன் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கடந்த பிப்ரவரி 19 இரவு கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள பூந்தமல்லியில் நடைபெற்று வருகிறது. இதற்காக நசரத்பேட்டையிலுள்ள இ வி பி பிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தது. இந்த படப்பிடிப்பின்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்தது. இந்த கிரேன் மானிட்டர் எனும் படப்பிடிப்புக் காட்சிகளைப் பார்க்கும் கூடாரம் மீது விழுந்தது.
அந்தப் பகுதியில்தான் இயக்குநர் ஷங்கர், உதவி இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலரும் இருந்தனர். இந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, உதவி கலை இயக்குநர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது என மூன்று பேர் பலியாகியுள்ளனர். 8 பேர் படுகாயமடைந்தனர். இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரிழந்த 3 பேர் உடலுக்கு கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர், பிரியா பவானி சங்கர் மற்றும் படக்குழுவினர் அனைவரும் நேரில் அஞ்சலி செலுத்தினார். இந்த விபத்தை தொடர்ந்து தொடர்ந்து இணை இயக்குநர் பரத்குமார் அளித்த புகாரில் லைக்கா நிறுவனம் போதுமான பாதுகாப்பு ஏற்பாடு செய்யாததே விபத்துக்குக் காரணம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் பாருங்க : 20 வருடத்திற்கு முன் நடிகை திரிஷா மிஸ் சென்னை பட்டம் வென்ற போது. தற்போது வைரலாகும் புகைப்படம்.
இதையடுத்து இந்த வழக்கு மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுத் துணை ஆணையர் நாகஜோதி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் இயக்குனர் சங்கருக்கு சம்மன் அனுப்பியதை அடுத்து அவர் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே, விஸ்வநாதன் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார். காவல் ஆணையர் விஸ்வநாதன் முன்னிலையில் மத்தியக் குற்றப்பிரிவினர் இயக்குநர் சங்கரிடம் விசாரணை நடத்தினர். விபத்து நடந்தது குறித்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று சங்கர், இந்தியன் 2 விபத்து நடந்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை செய்திருந்தார். சமீபத்தில் இயக்குனர் சங்கர் இந்தியன் 2 விபத்து குறித்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்து போன கிருஷ்ணா,மது, சந்திரன் ஆகியோர் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாயை உதவியாக அளித்துள்ளார். ஏற்கனவே நடிகர் கமல் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு 1 கோடியை அளித்திருந்தார் என்பதும் குறிபிடத்தக்கது.