தமிழ் சினிமாவில், சிம்பு சர்ச்சைக்குப் பேர் போனவர். நல்லதோ கெட்டதோ தன்னை சுற்றி பரபரப்பையும் ரசிகர்களையும் வைத்துக்கொள்வதில் வல்லவர் சிம்பு. `அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்துக்குப் பிறகு நடந்த சர்சையால் சிம்பு நடிக்கத் தடை விதிக்கப்பட இருப்பதாக வந்த பேச்சு பரவுவதற்குள், மணி ரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடிக்க கமிட் ஆனார்.
இது அவரின் ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸாக அமைந்தது. அந்தப் படம் முடியும் முன்னரே தனது அடுத்த 4 படங்களின் அறிவிப்பை சமீபத்தில் வெளிவிட்டார் சிம்பு.
விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ள படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். சிம்புவின் 34 வது படமான அந்த படத்தை, துருவங்கள் பதினாறு’ புகழ் கார்த்திக் நரேன் இயக்கவுள்ளார் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. எஸ்.டி.ஆரின் நெருங்கிய வட்டாரங்களைத் தொடர்புகொண்டபோது இப்படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் வரும் திங்கள்கிழமைத் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்தனர். மேலும், சிம்பு நடிப்பில் கலைப்புலி எஸ்.
தாணு தயாரிக்கும் படத்துக்கு ‘மங்காத்தா 2’ என டைட்டில் வைத்து படத்தை இயக்க வெங்கட் பிரபு பரிசீலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதிகாரபூர்வ அறிவிப்புக்காக சிம்பு ரசிகர்கள் வெய்ட்டிங்.