சமீபத்தில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘எங்க வீட்டு மாப்பிள்ளை ‘ நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது. நடிகர் ஆர்யாவிற்கு பெண் தேடும் நிகழ்ச்சியாக தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், பல இளம் பெண்கள் பங்குபெற்றனர். அதில் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் அகர்பத்தி என்று செல்ல பெயரை பெற்ற அபர்ணதி.
20 வயதாகும் அபர்ணதி எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார். அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற சக போட்டியாளர்கள் அனைவரிடமும் வாயாடி என்று பெயர் பெற்றார். சமீபத்தில் பொது மேடை ஒன்றில் ‘நடிகர் விஜய்க்கு இனி பட வாய்ப்புகள் வருமா’ என்று கிண்டலடித்துள்ளார். தற்போது அந்த விடயம் விஜய் ரசிகர்களிடம் வைரலாக பரவி வருகிறது.
புதுமுக இயக்குனர் விக்கி இயக்கத்தில், பிரபல இயக்குனரும் நடிகர் விஜய்யின் அப்பாவுமான எஸ். ஏ. சந்திரசேகர் சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்று படம் ஒன்றில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்ட அபர்ணதி மேடையில் பேசும் போது, இந்த படத்தில் நடித்துள்ள எஸ். ஏ. சந்திரசேகரை புகழ்ந்து பேசினார். அப்போது ‘இந்த படத்திற்கு பிறகு தளபதி விஜய்க்கு பட வாய்ப்புகள் வருமா? ஏனென்றால் இந்த படத்தில் சந்திரசேகர் சாரின் நடிப்பு அந்த அளவிற்கு இருக்கிறது. கண்டிப்பாக இந்த படம் மிக பெரிய வெற்றியடையும் ‘ என்று கூறியுள்ளார்.