நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் சர்கார் திரைப்படம், இலவசங்களுக்கு எதிராகக் கடுமையான வசனங்களை முன்வைக்கிறது. எனவே அந்த படத்தை திரையிட முழுவதுமாக தடைவிதிக்க கோரி அதிமுகவினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிக்கும் வகையிலான காட்சிகள் இருப்பதாகக் கூறி, அ.தி.மு.க நிர்வாகிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என நேற்று முதல் அதிமுகவினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிளில் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்த அதிமுகவினர் விஜய்யின் சர்கார் படம் ஓடிய திரையரங்குகளை முற்றுகையிட்டதோடு சர்கார் படத்தை திரையிட கூடாது என்று திரையரங்க உரிமையாளர்களிடம் வாக்குவாதம் செய்தனர். பிரச்சனை தீவிரமடைய படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க ஒப்புக்கொண்டது சர்கார் பட குழு.
இருப்பினும் சர்கார் படத்தை முழுவதுமாக தடை செய்யக்கோரி அதிமுகவினர் தொடர்ந்து போராட்டங்களை நடித்தி வருகின்றனர்.இந்நிலையில் இந்த பிரச்சனை குறித்து இதுவரை விஜய் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காத நிலையில் முதலமைச்சர் பழனி சாமியை சந்தித்து இந்த பிரச்சனை குறித்து விவாதிக்கபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.