சின்னத்திரை நடிகை வைஷ்ணவி தற்கொலை வழக்கில், டிவி நடிகர் தேவ் ஆனந்துக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.
சின்னத்திரை நடிகையான வைஷ்ணவி கடந்த 2006-ம் ஆண்டு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, வைஷ்ணவியின் தற்கொலைக்கு சின்னத்திரையில் அவருடன் பணியாற்றிய சக நடிகரான தேவ் ஆனந்துதான் காரணம் என வைஷ்ணவியின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். புகாரில், `வைஷ்ணவியை, தேவ் ஆனந்த 2-வதாக திருமணம் செய்துகொள்ள விரும்பினார். ஆனால், வைஷ்ணவி அவரது விருப்பத்தை நிராகரித்துவிட்டார். இதனால், ஆத்திரம் அடைந்த தேவ் ஆனந்த் வைஷ்ணவியை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். அவரது, துன்புறுத்தல் காரணமாகவே வைஷ்ணவி தற்கொலை செய்துகொண்டார்’ எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்றம், தேவ் ஆனந்துக்கு 5 ஆண்டு தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் தேவ் ஆனந்த். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து கடந்த 2011-ல் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், தேவ் ஆனந்துக்கு மகளிர் நீதிமன்றம் விதித்த 5 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.