அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த மாதம் 10 ஆம் தேதி வெளியான விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.அத்தோடு வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளைபடைத்து வருகிறது,இதுவரை வந்த அஜித் படத்திலேயே இந்த படம் தான் மிகப்பெரிய வெற்றி என்று கூறப்படுகிறது.
ரஜினியின் பேட்ட படத்திற்கு போட்டியாக வெளிவந்த இந்த படம் தமிழக்தில் பேட்ட படத்தை விட அதிக வசூலை பெற்றது. மேலும், படத்திற்கு தமிழகத்தில் கிடைத்த வெற்றியைதொடர்ந்து, தற்போது இந்த படம் தெலுங்கு, கன்னடம் என்று மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டது.
மேலும், தற்போது வரை இந்த படம் தமிழகத்தில் மட்டும் 125 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த படம் நேற்று (பிப்ரவரி 28) 50வது நாளை நெருங்கியது.
50 வது நாளை முன்னிட்டு தமிழகத்தில் 125 திரையரங்குகளில் இந்த படம் திரையிடபட்டது. இந்த நிலையில் சென்னையில் உள்ள பிரபல ரோகினி திரையரங்கில் உள்ள திரையை அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் போது கிழித்துள்ளனர். இதனால் 6 லட்ச ரூபாய் சேதமடைந்துள்ளது என்று திரையரங்க உரிமையாளர் கூறியுள்ளார். மேலும், இதற்கான நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை சிறப்பு காட்சிகளை ஓட்ட மாட்டோம் என்று ரோகினி திரையரங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.