தனியார் நிகழ்ச்சி ஒன்றில் டாக்டர் அம்பேத்கர் குறித்து மாரி செல்வராஜ் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக மாரி செல்வராஜ் திகழ்கிறார். இவர் முதலில் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் இவர் 2018ல் வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு மட்டும் இல்லாமல் பல்வேறு விருதுகளையும் பெற்றது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ படமும் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து கடந்த ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளிவந்த படம் மாமன்னன். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும், அரசியலையும் ஆதிக்க வர்க்கத்தினர் எப்படி பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை கூறி இருக்கிறது.
மாரி செல்வராஜ் திரைப்பயணம்:
இந்த படத்தை பார்த்து முதல்வர் மு. க. ஸ்டாலின், ரஜினிகாந்த், கமலஹாசன், தனுஷ் உட்பட பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இதை அடுத்து தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் வாழை. இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதை அடுத்து இவர் துரு விக்ரமை வைத்து படம் இயக்குகிறார். இந்த படத்தினுடைய படப்பிடிப்பும் கூடிய விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இவருடைய படங்கள் எல்லாமே சமூக நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
அம்பேத்கர் பிறந்தநாள்:
அதோடு இவர் ஜாதிரியில் ரீதியிலான படங்களை தான் கொடுக்கிறார் என்று பலரும் கூறுகிறார்கள். அதற்கு தன்னுடைய படங்களிலேயே இவர் பதிலையும் கொடுத்து வருகிறார். இந்நிலையில் இன்று சட்டமேதை அண்ணல் அம்பேத்கார் உடைய 133-வது பிறந்தநாள். இதை தமிழகம் முழுவதும் பலரும் கொண்டாடி வருகிறார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலருமே அம்பேத்கருடைய சிலைக்கும் மாலை அணிவித்தும், உருவப்படத்திற்கு மலர்கள் தூவையும் மரியாதை செலுத்தி இருக்கின்றார்கள்.
மாரி செல்வராஜ் வீடியோ:
இந்த நிலையில் ஏற்கனவே தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் மாரி செல்வராஜ் உடைய வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர், அம்பேத்கருடைய வாழ்க்கை வரலாறு இந்த தலைமுறையில் எடுக்க முடியுமா? என்று ஒரு சிறுமி என்னிடம் கேள்வி கேட்டார். அதற்கு நான், அம்பேத்கருடைய வாழ்க்கை வரலாறு ஏற்கனவே வந்திருக்கிறது. அவருடைய வாழ்க்கை பற்றி எல்லோருக்குமே தெரியும்.
அம்பேத்கர் குறித்து சொன்னது:
அதை எடுக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. அம்பேத்கருடைய கனவுகள் இருக்கிறது. அதை தான் எல்லோரும் எடுத்துக் கொண்டிருக்கிறோம். எல்லா வீடுகள், அரசு அலுவலகங்கள் என எல்லாவற்றிலுமே அம்பேத்கர் வந்துவிட்டார். ஆனால், நம் ஊரில் அம்பேத்கர் கூண்டுக்குள் இருக்கிறார். அது என்? என்பதற்கான படம் தான் பண்ணிக் கொண்டிருக்கிறோம். அந்த கூண்டு எப்போது திறக்கப்படுகிறதோ அப்போ வேறு கதை பிறக்கும் என்று கூறி இருக்கிறார்.