‘கேம் சேஞ்சர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஷங்கர் பேசியிருக்கும் விஷயங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், தெலுங்கு மொழியில் உருவாகி இருக்கும் படம் தான் கேம் சேஞ்சர். இந்தப் படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்திருக்கிறார். ராம்சரனுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சுனில், அஞ்சலி, உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கேம் சேஞ்சர் படத்தின் கதையை கொஞ்சம் டெவலப் செய்து சங்கர் இயக்கியிருக்கிறாராம். மேலும், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்தின் வேலைகள் கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கியது. கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக உருவான இப்படம் வருகின்ற ஜனவரி 10 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு உலக அளவில் வெளியாக காத்திருக்கிறது. தற்போது இந்த படத்தின் பிரமோஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
கேம் சேஞ்சர் :
இந்நிலையில், கடந்த ஜனவரி இரண்டாம் தேதி இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த விழாவில் இயக்குனர் சங்கர், ராம்சரண், தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குனர் ராஜமௌலி கலந்து கொண்டார்கள். இயக்குனர் ராஜ மௌலி தான் இந்த படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு, ‘ பிரம்மாண்டத்தின் ஒரிஜினல் கேங்ஸ்டர் (OG ) ஷங்கர்தான்’ என்று பெருமிதத்துடன் விழாவில் பேசியிருந்தார்.
ஷங்கர் பேசியது :
அதற்குப்பிறகு ‘கேம் சேஞ்சர்’ படம் குறித்து விழாவில் பேசிய ஷங்கர், ‘புதுமை, பிரம்மாண்டம், ஆக்சன், திரில்லர்’ என்று என்னிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறீர்களோ அதெல்லாம் இந்த படத்தில் இருக்கிறது. அரசு அதிகாரிக்கும், அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் போர் தான் இந்த படத்தின் கதை. ராம் சரண் கதாபாத்திரத்திற்கு ஒரு பெரிய பேக் ஸ்டோரி இருக்கிறது. இண்டர்வெல் சமயத்தில் அந்த பேக் ஸ்டோரி ஒரு பெரிய தாக்கத்தைக் கொடுக்கும்.
ஒரு தாக்கத்தை கொடுக்கும்:
மேலும், படம் முடியும்போது படம் பார்ப்பவர்களுக்கு ஒரு பெரிய தாக்கம் இருக்கும். ராம்சரண் அதை ரொம்ப சிறப்பாக செய்திருக்கிறார். அவர் இயக்குனர் என்ன சொன்னாலும் அதைச் செய்பவர். இந்தப் படத்தை அனைவரும் சங்கராந்தி என்று சொல்கிறார்கள். ஆனால், இது ராம்சரணின் ‘ ராம் நவமி’ என்று நடிகர் ராம் சரணை புகழ்ந்து பேசி இருக்கிறார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி சிறப்பாகவும் அழகாகவும் நடித்திருக்கிறார்.
படத்தில் நடித்தவர்கள் குறித்து:
ராம் சரணுக்கு போட்டி போட்டு அவர் இந்த படத்தில் நடித்திருக்கிறார். அஞ்சலி ரொம்ப நல்ல நடிகை, அவர் சோல் ஃபுல்லாக நடிக்கிறார். அவரின் கதாபாத்திரத்தில் ஒரு சர்ப்ரைஸ் ட்விஸ்ட் இருக்கிறது. எஸ்.ஜே.சூர்யாவும் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரைப் போன்ற ஒரு நடிகரை நான் பார்த்ததே இல்லை. மொத்த படக்குழுவும் சிறப்பாக வேலை செய்து இருக்கிறார்கள். வருகின்ற ஜனவரி 10 ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது என்று நிகழ்ச்சியில் ஷங்கர் பேசியிருக்கிறார்.