புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நியூயார்க் நகரில் சிகிச்சைப் பெற்றுவரும் சோனாலி பிந்த்ரே, தன் மகனுக்கு இன்ஸ்டாகிராமில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகையான சோனாலி, `காதலர் தினம்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். இதன் பின்னர், தமிழ்த் திரையுலகிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக்கொண்டார்.
இதையடுத்து, பாலிவுட்டில் தொடர்ந்து கவனம் செலுத்தி பிஸியானர். சமீபத்தில், எடுத்துக்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், அவருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதைடுத்து, உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அவர் நியூயார்க் நகரில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடுமையான சிகிச்சைக்கு இடையில், தன் உடல் நலம் குறித்தும், மகிழ்ச்சியான நிகழ்வுகள் குறித்தும் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், சோனாலியின் மகன் ரன்வீர் பெஹ்ல் (Ranveer Behl) தனது 13-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்.
இவரை வாழ்த்தும் வகையில், தனது இஸ்டாவில், `ரன்வீர்ர்ர்… என் சூரியன், என் வானம், என் நிலா… நான் பேசுவது அதிகப்படியாக இருக்கலாம். ஆனால், உனது பிறந்தநாளில் இதை நான் சொல்லியே ஆக வேண்டும். உனக்கு 13 வயது ஆகிவிட்டது. இந்த வயதுக்குத் தகுதியுடையவனாக நீ இருக்கிறாய். அந்த உண்மையைப் புரிந்துகொள்ள, இன்னும் சில காலம் தேவைப்படுகிறது. உன்னை நினைத்து பெருமைகொள்கிறேன். என்னிடம் சொல்வதற்கு வார்த்தை இல்லை. இதுதான், முதல்முறை உனது பிறந்த நாளை தனித் தனியாக இருவரும் கொண்டாடுவது. உனது பிரிவால் தவித்துக்கொண்டிருக்கிறேன்… I miss you terribly… இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரன்வீர்…’ என்று உணர்வுபூர்வமாக சோனாலி பதிவிட்டுள்ளார். இதனுடன், வீடியோ பதிவு ஒன்றையும் இனைத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சோனாலி, தன் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.