திமுக கட்சியில் இணைவது குறித்து கலைஞர் கமலுக்கு எழுதிய கடிதம் குறித்த சுவாரசியமான தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமலஹாசன். தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் கமலஹாசன். இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உலக நாயகனாக அவதாரம் எடுத்து இருக்கிறார்.
மேலும், கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகியிருந்த படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்திருந்தது. இதனை அடுத்து கமலின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் இந்தியன் 2. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார்.
இந்த படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இதனை அடுத்து கமல் அவர்கள் ப்ராஜெக்ட் கே, வினோத் இயக்கத்தில் கே எச் 223, மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு படம் என்று பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் கோவையில் நடந்த கல்லூரி விழாவில் கமலஹாசன் பங்கேற்று இருந்தார். அப்போது அவர், எனக்கு சரியான கல்வி கிடைக்கவில்லை என்றாலும் நான் மக்கள் மனதில் இடம் பிடிக்க காரணம் என்னுடைய ஆசிரியர்கள் தான்.
கல்விதான் நம் சமூகத்தில் கலங்கரை விளக்கம். பள்ளி நாட்களிலேயே எனக்கு ஒரு அளவு அரசியல் புரிந்தது. சுதந்திரம், தேசியம், திராவிடம், தமிழ் தேசியம் என பல கருத்துக்கள் ஆசிரியர்கள் தெளிவாக மாணவர்களிடம் சொன்னார்கள். அதனால் மாணவர்களுக்கும் அரசியல் புரிந்தது. ஆனால், இப்போது அந்த மாதிரியான எந்த ஒரு அரசியல் புரிதல் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இல்லை. அதோடு நாம் இன்று சுதந்திரமாக பேசிக் கொண்டிருப்பதற்கு நம் முன்னோர்கள் தான் காரணம். உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும். ஜனநாயகம் என்பது சுமை அல்ல. 2024 பாராளுமன்ற தேர்தல் வரப்போகிறது.
முதன் முதலில் வாக்களிக்க போகின்ற மாணவர்கள் உங்களை ஆளும் தகுதி அவருக்கு உண்டா என்பதை பார்த்து ஒட்டு போடுங்கள். அரசியல் எப்போது மாறும், இந்தியா எப்போது மாறும் எனக் கேட்டால் எல்லோரும் ஓட்டு போட ஆரம்பித்து விட்டால் அது கண்டிப்பாக மாறும். மாற்றத்தை உங்களிடம் இருந்து துவங்குங்கள். அதேபோல் என்னுடைய 22 வயதில் எனக்கு கலைஞர் தந்தி ஒன்று அனுப்பியிருந்தார். அதில், நீங்கள் ஏன் திமுகவில் இணைய கூடாது என்று கேட்டார். ஆனால், நான் எந்த பதிலும் சொல்லாமல் இருந்து விட்டேன்.
60 வயதில் என் கலை என்னை காப்பாற்ற வில்லை. ஜனநாயகம் தான் காப்பாற்றியது. நான் அரசியலுக்கு கொஞ்சம் முன்பே வந்திருந்தால் இன்னும் பல மாற்றங்களை செய்து இருக்க முடியும். மேலும், சினிமா,தொழில் துறை என எங்கும் சமத்துவம் இல்லை. பெண்களுக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்படுவது இல்லை. பெண்களுக்கு சம அங்கீகாரம் இருக்கும் போது தான் அது மாறும் என்று பல விஷயங்களை கமல்ஹாசன் கூறி இருந்தார்.