‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக தேசிய விருது வென்ற ஆனந்த் கிருஷ்ணமூர்த்தியின் பழைய பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது 70 வது தேசிய திரைப்பட விருது விழா நடைபெற இருக்கிறது. அதற்காக சமீபத்தில் தான் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் பல விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.
அதாவது இந்த படத்திற்கு நான்கு தேசிய விருதுகள் கிடைத்திருக்கிறது. சிறந்த தமிழ் படத்திற்கான விருதை பொன்னியின் செல்வன் முதல் பாகம் வென்றிருக்கிறது. அந்த படத்திற்கு இசையமைத்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்திருக்கிறது. பின், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை ரவிவர்மன் வாங்கி இருக்கிறார். அதேபோல், சிறந்த ஒலி அமைப்புக்கான விருது ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கு கிடைத்திருக்கிறது என்பது நாம் மறந்ததே.
ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி குறித்து:
தற்போது, சோசியல் மீடியா முழுவதும் ஆனந்த கிருஷ்ணமூர்த்தி குறித்த தகவல் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான படைப்புகளில் ஒன்றான ‘அஞ்சலி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகி இருந்தார் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி. அதனைத் தொடர்ந்து இவர் மே மாதம், சதிலீலாவதி, ஆசை தளபதி போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதற்குப் பின் இவர் தனது படிப்பை முடித்துவிட்டு உன்னைப் போல் ஒருவன், மன்மதன் நம்பு, விஸ்வரூபம், ஓ காதல் கண்மணி, செக்கச் சிவந்த வானம், பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களில் டிசைனர், இன்ஜினியர் போன்ற பணிகள் செய்து இருந்தார்.
ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி பேட்டி:
இந்நிலையில் இவரின் பழைய பேட்டி ஒன்று வைரல் ஆகி வருகிறது. அதில், என்னதான் எனக்கு மணிரத்தினம் சார் சின்ன வயதில் இருந்து தெரிந்தாலும், தொழில் என்று வந்து விட்டால் அவர் கராராக தான் இருப்பார். நான் ‘அஞ்சலி’ படம் பண்ணும் போதே அவர் அப்படித்தான். கமல் சாரின் ‘மர்மயோகி’ திரைப்படம் தான் நான் முதல் முதலாக சவுண்டு இன்ஜினியராக பணியாற்றிய படம். அந்தப் படத்தைப் பற்றி நான் எதுவும் சொல்ல மாட்டேன். அது கமல் சாரின் குழந்தை. அந்தப் படம் வெளியே வந்திருந்தால் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்திருக்கும்.
பொன்னியின் செல்வன் குறித்து:
சிறுவயதில் நான் நடித்த ‘அஞ்சலி’ படத்தின் ஆடியோ கிராஃபிற்கு தேசிய விருது கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு சவுண்ட் இன்ஜினியருக்காக பணியாற்றி இருக்கேன். இதிலிருந்து காலம் எவ்வளவு கோர்வையாக செல்கிறது என தெரிகிறது. மேலும், ஒரு நடிகராக இருப்பதை விட, திரைக்குப் பின்னால் ஒரு டெக்னீசியனாக இருப்பதுதான் பாதுகாப்பானது என்று நான் நினைக்கிறேன். ஒருவேளை நான் நடிகராக இருந்திருந்தால், இந்தத் துறைக்கு வந்திருக்க மாட்டேன்.
நான் இயல்பான மனிதன்:
மேலும், நடிகராக இருப்பதை விட டெக்னீசியனாக இருப்பது மிகவும் கடினமானது. பின் சிறு வயதில் திரையில் என்னுடைய முகத்தை பார்த்தவர்கள், இப்போது நான் வெளியே போனா கூட கண்டுபிடித்து விடுகிறார்கள். சிலர் என்னை எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறது என்று சொல்வார்கள். அதற்குக் காரணம் நான் மிகவும் இயல்பாக பொதுவெளியில் நடமாடுவேன். பொது போக்குவரத்தில் கூட நான் பயணிக்கிறேன் என்று கூறியுள்ளார். தற்போது இவர் கமல், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்திலும் பணியாற்றி வருகிறார்.