பிகே ரோஸி திரைப்பட விழாவில் சாதி படங்கள் குறித்து பா ரஞ்சித் பேசி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் பா.ரஞ்சித். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றிருக்கிறது. மேலும், இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் தங்களுடைய நீலம் பண்பாட்டு மையம் சார்பாக பிகே ரோஸி திரைப்பட விழாவை வருடம் வருடம் நடத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது நான்காம் ஆண்டு பிகே ரோஸி திரைப்பட விழா நடைபெற்றிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் பா ரஞ்சித், இந்திய சினிமா தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் புராண படங்களை தான் எடுத்திருந்தார்கள். அதற்குப்பின் சுதந்திரம் பேசும் படங்களை கொடுத்தார்கள். அதனை அடுத்து தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் வந்தது. திராவிட கட்சிகளைப் பற்றியும் அவர்களுடைய கொள்கைகளை பற்றியும் பேசும் படங்கள் வெளிவந்திருந்தது.
பிகே ரோஸி திரைப்பட விழா:
அந்த சமயத்தில் தான் அண்ணாதுரை, கலைஞர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்ற நிறைய பேர் மக்களுக்கு சமூக கருத்தை கொண்டு சேர்க்கும் ஒரு இடமாக சினிமாவை பயன்படுத்தினார்கள். இது தமிழகத்தில் முக்கிய மாற்றமாக இருந்தது. அதோடு திராவிட இயக்கங்கள், எல்லா கலை இலக்கிய ஊடகத்தையும் தங்களுடைய பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினார்கள். இதைத் தொடர்ந்து எம்ஜிஆர் கால கட்டம் வந்தது. அப்போது கமர்சியல் நோக்கி சினிமா சென்றது.
சினிமா காலகட்டம் குறித்து சொன்னது:
அப்போது தான் கமல், ரஜினி போன்ற நடிகர்கள் வந்தார்கள். இதனால் மீண்டும் ஒரு மாற்றம் சினிமாவில் நடந்தது. பின் பாரதிராஜா, பாலு மகேந்திரா போன்ற இயக்குனர்கள் வந்தார்கள். அவர்கள் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி இருந்தார்கள். குறிப்பாக, பாலு மகேந்திரா படங்கள் எல்லாம் அழகைப் பேசும், பாரதிராஜா படங்கள் ஏழை எளிய மக்களுடைய வாழ்க்கையை பேசியது. அதற்குப் பிறகு சினிமா வேறு ஒரு பரிமாணத்தில் மாறியது. 90களில் சினிமாவில் நிறைய ஜாதி படங்கள் வர ஆரம்பித்தது.
சாதி படங்கள் குறித்து சொன்னது:
தேவர்மகன், சின்ன கவுண்டர், பெரிய வீட்டு பண்ணைக்காரன் போன்ற பல படங்கள் வந்தது. இது முற்றிலுமாக வேறொரு விஷயத்தை கொண்டு சென்றது. இதனால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் உடைய நோக்கத்தை மாற்றியது. அதற்குப் பிறகு நிறைய ஜாதியின் பெருமை குறித்த படங்கள் வந்தது. இதெல்லாம் விவாதமாக ஆனதா? என்று கேட்டால் இல்லை. ஏன் அப்போது விவாதத்திற்கு உண்டாக்கவில்லை? இப்போது ஒரு படம் எடுக்குறாங்க என்றாலே ரொம்ப நல்ல கதையாக இருந்தாலும் ஏன் ஜாதியை வைத்து எடுக்கிறீர்கள்? உங்களால் தான் சாதி பிரச்சனை வருகிறது. ஜாதி எண்ணத்தை உங்கள் படங்கள் தான் உருவாக்குகிறது.
ரஞ்சித்தின் ஆவேசம்:
இதுவரை யாரும் ஜாதியை பார்த்ததில்லை, நீங்க வந்து தான் இதை மாத்திட்டீங்க என்றெல்லாம் ஒரு சிலர் கூறுகிறார்கள். ஆனால், இதற்கு முன்னாடி வந்த ஜாதி படங்களை பார்த்து ஏன் இந்த கேள்விகளை கேட்கவில்லை? ஜாதி பெருமைகளைப் பற்றி பேசிய படங்கள் நிறைய வந்தும் எந்த விவாதங்களும் ஏற்படுத்தவில்லை, விமர்சனங்களும் எழவில்லை. சோசியல் மீடியாவில் கூட எந்த கேள்வியும் எடுக்கவில்லை. ரொம்ப இயல்பாக நடந்து கொண்டார்கள். என்னைப் பொறுத்தவரை அந்த சினிமாக்கள் எதிரான சினிமாக்களை கிடையாது. அது இயல்பான சினிமா. ஆரம்பகால கட்டத்தில் இருந்து இருக்கிற தமிழ் சினிமா தான் அது. அதற்கும் இப்ப இருக்குற சினிமாவுக்கும் எந்தவிதமான வேறுபாடும் எனக்கு தெரியவில்லை என்று ஆதங்கத்துடன் பேசி இருந்தார். ஏற்கனவே மாமன்னன் திரைப்படத்தின் போது தேவர்மகன் படம் குறித்து மாரி செல்வராஜ் கூறிய கருத்துக்கள் சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.