ரோலிங் ஸ்டோன் இதழின் அட்டைப்படத்தில் பாடலாசிரியர் அறிவு படம் இடம்பெறாததற்கு இயக்குநர் பா. ரஞ்சித் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், அட்டைப் படத்தில் இடம்பெற்ற பாடகர் ஷான் வின்செண்ட் பால் டி ரஞ்சித் குறித்து போட்ட பதிவு தமிழ் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன் சர்வதேச இசை இதழான ரோலிங் ஸ்டோனின் இந்திய பதிப்பின் அட்டை படத்தில் ‘எஞ்சாய் எஞ்சாமி’ மற்றும் ’நீயே ஒளி’ பாடல்களின் சர்வதேச சாதனைகளை பாராட்டும் வகையில் பாடகி தீ மற்றும் பாடகர் ஷான் வின்செண்ட் டீ பால் ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்றது.
ஆனால், இரண்டு பாடல்களின் பாடலாசிரியரும், ’எஞ்சாய் எஞ்சாமி’ பாடலின் பாடகர்களில் ஒருவருமான ’தெருக்குரல்’ அறிவின் படம், அதில் இடம் பெறவில்லை. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்த நிலையில் தெருக்குரல்’அறிவு படம் ரோலிங் ஸ்டோன் இதழின் அட்டை படத்தில் இடம்பெறாததற்கான காரணம் புரியவில்லை, அறிவு மீண்டும் ஒருமுறை மறைக்கடிக்கப்பட்டிருக்கிறார்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியிருந்தார் இயக்குநர் பா.ரஞ்சித்.
ரஞ்சித்தின் இந்த பதிவு பெரும் வைரலானது. இப்படி ஒரு நிலையில் பாடகர் ஷான் வின்செண்ட் டீ பால் ரஞ்சித்தை கடுமையாக சாடியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிவு உங்களுக்கு எப்போதும் என் ஆதரவு உண்டு. பிரதிநிதித்துவதுக்கான உங்கள் போராட்டத்தில் இப்போது மட்டுமல்ல எல்லா தருணங்களிலும் நான் துணை நிற்பேன். நீங்கள் எல்லோருக்கும் பெரிய இன்ஸ்பிரேஷனாக இருக்கிறீர்கள். நாம் இருவரும் நம் சமூகத்துக்காகப் போராடுகிறோம்.
இந்தப் போராட்டத்தில் நம்மை யாரும் பிரிக்கமுடியாது. உங்கள் பாடல்களுக்கான அங்கீகாரத்தை நான் எடுத்துக் கொள்ள ஒருபோதும் முயற்சிக்க மாட்டேன் என்று கூறி இருந்தார். அதே போல ரஞ்சித் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஞ்சித்தின் ட்வீட்டும் அதற்கு வந்த கடுமையான எதிர்வினைகளும்தான் என்னை பாதிக்கிறது. அவர் பொறுப்பற்ற முறையில் தமிழ் கலைஞர்களிடையே பிரிவினையைத் தூண்டிவிட்டிருக்கிறார்.
இந்தப் பாடலின் ஆங்கில வரிகளை எல்லாம் நான் எழுதி, வீடியோவை இணை இயக்கி, எடிட்டும் செய்தேன். அறிவு தமிழ் பகுதிகளை எழுதி பங்களித்தார். இது ஒரு கூட்டுழைப்பு. ஆனால், இயக்குநர் இரஞ்சித்தின் கருத்துகள் எங்களிடையே பிளவை உண்டாக்கியிருப்பதோடு, வளர்ந்துவரும் கலைஞர்களை பலி கொடுத்துவிட்டது என்று ரஞ்சித்தை கடுமையாக சாடியுள்ளார்