இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் நாளை மறுநாள் திரைக்கு வரவுள்ளது. இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் அனைத்து திரையரங்குகளில் பேனர்களை வைத்து வருகின்றனர்.இந்நிலையில் சர்கார் படத்தின் சர்ச்சைக்குரிய புகைப்படம் அடங்கிய பேனரை வைக்க தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தடை விதிக்க மனு கொடுத்துள்ளது.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போது அந்த போஸ்டரில் நடிகர் விஜய் புகைபிடிப்பது போல காட்சிகள் இடம் பெற்றதால் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த போஸ்டர் இணையத்தில் இருந்து நீக்கியது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
அதே போல படத்தில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றால் படத்திற்கு தடை உத்தரவு வாங்குவேன் என்று பா ம க கட்சியின் ராமதாசும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் பல்வேறு திரையரங்குகளில் ரசிகர்கள் வைத்த பேனர்களில் விஜயின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் ‘சர்கார்’ திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற பேனர்களை ரசிகர்கள் வைப்பதை தடுக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.இதனால் சர்கார் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் வரும் விஜய்யின் புகைப்படத்தை வைத்து பேனர்களை தயார் செய்த விஜய் ரசிகர்கள் அப்செட்டில் உள்ளனர்.